
செயற்கைக்கோள்கள் - எழில் அண்ணல்; பக்.116; ரூ.150; சத்யா எண்டர்பிரைசஸ், சென்னை-94; ✆ 044- 4507 4203.
புளூட்டோவை சர்வதேச வானியல் கழகம் தகுதி நீக்கம் செய்ததால், வானில் எட்டு கோள்கள் சுற்றி வருகின்றன. அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியின் பயனால் மனிதர்கள் தயாரித்து அனுப்பியவை செயற்கைக்கோள்கள். இவற்றின் தோற்றம், வகைகள், பயன்கள், இயங்கும் விதம், வரலாற்று ரீதியாக அதன் வளர்ச்சிப் பாதை, விண்ணில் ஏவ பயன்படும் ராக்கெட் தொழில்நுட்பம் உள்ளிட்டவை குறித்து "ஏ டூ இசட்' தகவல்களை இந்த நூலிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.
ஐம்பது நாடுகளின் செயற்கைக்கோள்கள் விண்ணில் இருந்தாலும், பத்து நாடுகளுக்கு மட்டுமே ஏவும் ஆற்றல் உள்ளது என்பது போன்ற எண்ணற்ற தகவல்களைத் தெரிந்து கொள்ள முடிகிறது.
தொலைத்தொடர்பு, விவசாயம், மருத்துவம், வானிலை அறிக்கை போன்றவற்றுக்கு செயற்கைக்கோளின் பங்குகள் குறித்து அறியும்போது, மனிதர்களின் ஒவ்வொருவரின் வாழ்விலும் செயற்கைக்கோளின் பங்கு பெற்றிருப்பதையும், "செயற்கைக்கோளின்றி ஓர் அணுவும் அசையாது' என்பதையும் உணர முடிகிறது.
இதுதவிர, இந்திய விண்வெளி ஆய்வு மையம், சாதனை நிகழ்த்திய ராக்கெட் விவரங்களும், சந்திரனை ஆராயும் சந்திரயான் குறித்த சிறப்புத் தகவல்களும் உள்ளன. செயற்கைக்கோள்கள், முக்கிய ஆராய்ச்சியாளர்கள் குறித்த அரிய புகைப்படங்கள் நூலுக்கு மெருகூட்டுகின்றன.