
சகலகலா சனீஸ்வரன்- பொ. பொன்முருகன்; பக்.137; ரூ.170; சத்யா எண்டர்பிரைசஸ், சென்னை -94; ✆044 - 4507 4203.
நவக்கிரகங்களில் எல்லாரும் பயப்படும் சனீஸ்வரரைப் பற்றிய நூல் இது . இந்நூலின் தொடக்கத்திலேயே சனீஸ்வரர் தண்டிப்பவர் அல்ல; அவர் நீதிமான்; நமக்கு உலகத்தின் நல்லவை கெட்டனவற்றைப் புரிய வைத்து நம்மை நல்வழிப்படுத்த உள்ள கிரகம் என்றால் அது சனீஸ்வரர்தான் என சொல்கிறார்.
மேலும் இதிகாசங்களான மகாபாரதம், ராமாயணம், சிலப்பதிகாரம், நளதமயந்தி கதை போன்றவற்றில் நிகழும் சம்பவங்களுக்கு சனி பகவான் காரணமாக இருந்ததை நூல் விளக்குகிறது. உதாரணமாக கோவலன் கண்ணகியைப் பிரிந்ததும், மாதவியைச் சேர்ந்ததும், மதுரையில் கோவலன் தலை துண்டிக்கப்பட்டதும் எல்லாம் சனீஸ்வரனின் சூழ்ச்சியே என்கிறார் நூலாசிரியர்.
சனிபெயர்ச்சியின் வகைகள், அதன் விளைவுகள், அதற்கான எளிய பரிகார ஸ்தலங்கள் கூறப்பட்டுள்ளன. தமிழகத்தில் உள்ள திருநள்ளாறு சனீஸ்வரன் கோயில், குச்சனூர் சனீஸ்வரன் கோயில், திருக்கொள்ளிக்காடு ஸ்ரீ அக்னீஸ்வரர் திருக்கோயில், மத்திய பிரதேசம் இந்தூர் சனிபகவான் ஆலயம், திருகோணமலை சனீஸ்வரன் ஆலயம் உள்ளிட்ட பல சனீஸ்வரன் கோயில் பற்றிய விவரங்களும் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.
வாழ்வில் திடீரென ஏற்படும் சறுக்கல்களும், இடம் மாற்றங்களும், இழப்புகளும், சனியால் விளைந்ததே என்றும், வாழ்வு தரும் படிப்பினை புரிந்ததும் இழந்தவை அனைத்தையும் மீட்டுத் தருபவரும் அவரே எனவும் நூல் கூறுகிறது.