
ஒரு வானவில் வாழ்க்கை - ராணிமைந்தன்; பக்.240; ரூ.250; சென்டர் ஃபார் டெவலப்மென்ட் எஜுகேஷன் அன்ட் கம்யூனிகேஷன் & நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் எஜுகேஷன் அன்ட் கம்யூனிகேஷன், சென்னை-14; ✆ 044- 2835 3136.
1996 முதல் மலேசியாவில் ரேடியோ ஒலிபரப்பு சேவைகளைச் செய்துவரும் ஆஸ்ட்ரோ ரேடியோ என்ற மலேசிய ரேடியோ நெட்வொர்க் நிறுவனத்தில் இயக்குநராக 25 வருடங்கள் இருந்த பணியாற்றிய என்.சி.ராஜாமணி அவர்களின் வாழ்க்கை வரலாறு இந்நூல். அப்போது அவர் பல புதிய நிகழ்ச்சிகளை வழங்கி மக்களின் பெரும் வரவேற்பைப் பெற்றார்.
வாழ்வில் மகத்தான சாதனைகளை நிகழ்த்திய அவர் பிறந்ததோ தென்ஆற்காடு மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி அருகே உள்ள கச்சிராபாளையம் என்ற கிராமத்தில். இளம் வயதிலிருந்தே தன் கடுமையான முயற்சியால் வாழ்வில் பல முன்னேற்றங்களைக் கண்டவர். இளநிலைப் பட்டப்படிப்பு இரண்டாம் ஆண்டு படிக்கும்போது கிடைத்த வங்கிப் பணியை ஏற்க மறுத்து தொடர்ந்து படித்த அவரின் குறிக்கோள் மருத்துவம் படிப்பதுதான். ஆனால் தனது படிப்புக்கும் விருப்பத்துக்கும் சற்றும் தொடர்பில்லாத பணியான தொலைக்காட்சியில் உதவித் தயாரிப்பாளர் பணியில் சென்னை தொலைக்காட்சியில் சேர்ந்திருக்கிறார். மிகவும் வித்தியாசமான முறையில் பணிபுரிந்து தனது தடத்தை அழுத்தமாக சென்னை தொலைக்
காட்சியில் பதித்த அவரை மலேசிய நிறுவனம் பணிக்கு அழைத்தபோது, மத்திய அரசின் நிரந்தரப் பணியை விட்டுவிட்டு துணிச்சலாக தனியார் நிறுவனத்தில் சேர்ந்திருக்கிறார். அவருடைய இத்தகைய நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்காமல், அவருடைய துணைவியார் உறுதுணையாக இருந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மலேசிய நிறுவனத்திலும் பல புதுமையான நிகழ்ச்சிகளை நடத்தி பெரும்புகழ் பெற்றிருக்கிறார். கடுமை
யான உழைப்பு, முயற்சி, துணிச்சல் ஆகியவற்றின் மூலமாக வாழ்வில் முன்னேற்றமடைந்து உயரத்தை எட்ட முடியும் என்பதை நிரூபித்த அவரின் வாழ்க்கை வரலாற்றை மிகவும் சுவையான, எளிமையான நல்ல வாசிப்பனுபவத்தைத் தரும்விதத்தில் ராணிமைந்தன் எழுதியிருக்கிறார். வாழ்வில் முன்னேறத் துடிப்பவர்களுக்கு உத்வேகம் ஊட்டும் நூல்.