
வள்ளலார் - மாசற்ற ஜோதி -ஸ்ரீதேவி கண்ணன்; பக்.144; ரூ.170; கிழக்கு பதிப்பகம், சென்னை-14; ✆ 044-4200 9603.
'வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்' என்று கூறிய வள்ளலாரின் பிறப்பில் தொடங்கி அவரின் குழந்தைப் பருவம், கல்வி, ஆன்மிகப் பணி, இலக்கியப் பங்களிப்பு, சமூகப் பணி, மறைவு எனப் பல்வேறு கோணங்களில் 29 அத்தியாயங்களில் அவரை ஆராய்கிறார் நூலாசிரியர்.
தம்மை நாடி வரும் அன்பர்களுக்கு ஆண்டவனை அடையும் அருளியலை மட்டும் வள்ளலார் போதிக்கவில்லை. ஒழுக்க நெறிகளைக் கடைப்பிடிக்கவும் உபதேசித்தார். இதிலிருந்து தாயுமானவர், பட்டினத்தார், அருணகிரிநாதர் உள்ளிட்டோரிடமிருந்து வள்ளலார் தனித்துவம் மிக்கவராய் விளங்கினார் என்பதை இந்நூல் மூலம் அறிய முடிகிறது.
மெய்ஞானி, சைவ அறிஞர், கவிஞர் என பல்வேறு பரிமாணங்களைக் கொண்ட வள்ளலார் சாதி-மத வேறுபாடுகளை மறுத்து சமர சன்மார்க்க நெறியை முன்னெடுத்தார். சடங்குகளைத் தூற்றி, கடவுளை ஒளி வடிவில் போற்றினார் வடலூரில் சத்திய ஞான சபை, சத்திய தர்ம சாலை ஆகியவற்றை நிறுவி மக்களின் அறிவுப் பசியையும், வயிற்றுப் பசியையும் தீர்க்க முற்பட்டார். வெறும் சம்பவங்களின் கோர்வையாக இல்லாமல், வள்ளலார் பெருமானைச் சுற்றி நடைபெற்ற அதிர்வுகள், விவாதங்களின் மூலம் நூலாசிரியர் வெளிச்சம் பாய்ச்சுகிறார்.
வள்ளலாரின் சமய சீர்திருத்தக் கொள்கைகளை அவரைச் சுற்றி இருந்தவர்களாலேயே முழுமையாகக் கடைப்பிடிக்க முடியவில்லை; அவர் நிறுவிய தருமச்சாலை, ஞான சபையில் ஒழுக்கமும், ஒழுங்கும் வள்ளலாருக்கு மன நிறைவை அளிக்கவில்லை உள்ளிட்ட காரணங்களால் "கடை விரித்தேன் கொள்வாரில்லை, கட்டிக்கொண்டேன்' என்று மனம் நொந்தார்.
வள்ளலாரின் மறைவை அவர் ஜோதியில் கலந்தார் என்றே பெரும்பான்மையோர் நம்பினர். ஒரு சீர்த்திருத்தவாதியின் மரணத்தில் இத்தனை குழப்பங்கள் நிகழ்ந்தது துரதிருஷ்டவசமானது. வள்ளலாரை எங்கிருந்து அணுகுவது என்று திகைப்போருக்கு இந்நூல் வழிகாட்டியாய் விளங்குகிறது.