கோவில்பட்டியில் நடைபெற்று வரும் அகில இந்திய ஹாக்கி போட்டியில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் தமிழ்நாடு, ஜலந்தர் இ.எம்.இ., ஆந்திரம் ஆகிய அணிகள் வெற்றி பெற்றுள்ளன.
கோவில்பட்டி லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில் திங்கள்கிழமை நடைபெற்ற முதல் ஆட்டத்தில் தமிழ்நாடு லெவன் அணியும், ஹைதராபாத் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா அணியும் மோதின.
முதல் பாதியில் ஹைதராபாத் அணி இரு கோல் அடித்தது. அந்த அணியின் நாகராஜ் 2-ஆவது நிமிடத்திலும், சுரேந்தர்சிங் 16-வது நிமிடத்திலும் பெனால்டி கார்னர் மூலம் கோல் அடித்தனர்.
பின்னர் நடைபெற்ற 2-வது பாதி ஆட்டத்தில் தமிழக அணி ஆக்ரோஷமாக ஆடியது. தமிழகம் தரப்பில் ராஜசேகர், ராம்குமார் ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர்.
ஆட்டநேர முடிவில் இரு அணிகளும் 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலையில் இருந்தன. இதன்பிறகு ஷூட்-அவுட் முறை கடைப்பிடிக்கப்பட்டது. இதில் தமிழக அணி 4-3 என்ற கணக்கில் வெற்றி கண்டது. பிற்பகலில் நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை வருமான வரித் துறை அணி 0-3 என்ற கோல் கணக்கில் ஜலந்தர் இ.எம்.இ. அணியிடம் தோல்வி கண்டது.
இதைத் தொடர்ந்து நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை ஐ.சி.எஃப். அணி 1-2 என்ற கோல் கணக்கில் ஆந்திர லெவன் அணியிடம் தோல்வி கண்டது.
இன்றைய ஆட்டங்கள்
ஆந்திர போலீஸ்-
ஜலந்தர் இ.எம்.இ.
நேரம்: 2.30
லட்சுமி அம்மாள்
நினைவு அணி- சென்னை இந்தியன் வங்கி
நேரம்: மாலை 4.30