3-வது டெஸ்ட்: 386 ரன்கள் இலக்கு; இலங்கை 67/3

கடைசி நாளன்று இலங்கை அணி வெற்றி பெற 319 ரன்கள் தேவை.
3-வது டெஸ்ட்: 386 ரன்கள் இலக்கு; இலங்கை 67/3
Updated on
2 min read

இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்டில், இலங்கை அணிக்கு 386  ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆட்ட நேர முடிவில் இலங்கை அணி 3 விக்கெட் இழப்புக்கு 67 ரன்கள் எடுத்துள்ளது.

இந்தியா-இலங்கை இடையே நடைபெற்று வரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 111 ரன்கள் முன்னிலை பெற்றது. இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 312 ரன்களும் இலங்கை அணி 201 ரன்களும் பெற்றன. 3-ம் நாளின் முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 21 ரன்கள் எடுத்தது. கோலி 1 ரன்னுடனும், ரோஹித் சர்மா 14 ரன்களுடனும் களத்தில் இருந்தார்கள்.

இன்று ஆட்டம் தொடங்கியபோது சிறிது நேரம் தாக்குப் பிடித்த கோலி, பிறகு 21 ரன்களில் ஆட்டமிழந்தார். ரோஹித் சர்மா மிகவும் கவனமாக ஆடி அரை சதம் அடித்து அவுட் ஆனார். பிறகு ஜோடி சேர்ந்த புதிய முகங்கள் பின்னி - ஓஜா உணவு இடைவேளை வரை அவுட் ஆகாமல் இருந்தார்கள். உணவு இடைவேளையின்போது இந்திய அணி, 5 விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் எடுத்திருந்தது. பின்னி 38, ஓஜா 11 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள்.

பிறகு 45-வது ஓவரில் 49 ரன்களில் ஆட்டமிழந்தார் பின்னி. அடுத்ததாக நன்றாக ஆடி வந்த ஓஜாவும் 35 ரன்களில் ஹெராத் பந்துவீச்சில் விக்கெட்டைப் பறிகொடுத்தார். பிறகு ஜோடி சேர்ந்த மிஸ்ராவும்  அஸ்வினும் பொறுப்பாக ஆடி இந்திய அணியின் ரன்களை அதிகரித்தார்கள். தேநீர் இடைவேளை நெருங்கும் சமயத்தில் 39 ரன்களில் ரன் அவுட் ஆனார் மிஸ்ரா. இதனால் தேநீர் இடைவேளை அறிவிக்கப்பட்டது. அப்போது அஸ்வின் 27 ரன்களுடன் களத்தில் இருந்தார்.

இந்தத் தொடரில் பேட்டிங்கில் தனது திறமையை நிரூபிக்காக அஸ்வின் இந்தமுறை நன்றாக ஆடினார். அரை சதம் அடித்தார். கடைசியாக உமேஷ் யாதவ் 4, அஸ்வின் 58 ரன்களில் அவுட் ஆனதால் இந்திய அணி 76 ஓவர்களில் 274 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. முதல் மூன்று பேட்ஸ்மேன்களுக்கு அடுத்த வந்த 6 பேட்ஸ்மேன்களும் ஒவ்வொரு விதத்தில் அணிக்குப் பங்களிப்பு செலுத்தியுள்ளார்கள். அதிகபட்சமாக ரன்கள் எடுத்தது அஸ்வின்.

இந்திய அணி இன்னிங்ஸின் கடைசி ஓவரில் இஷாந்த் சர்மாவுக்கு இலங்கை பவுலர் தம்மிகா பிரசாத்துக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. நடுவர்கள் தலையிட்டு மோதலைத் தடுத்து நிறுத்தினார்கள். கடைசியாக அஸ்வின் அவுட் ஆனதால் இந்தப் பிரச்னை அதோடு முடிவுக்கு வந்தது.

இலங்கை அணிக்கு 386 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. தொடக்க ஆட்டக்காரர்களாக தரங்காவும் சில்வாவும் களமிறங்கினார்கள். முதல் ஓவரிலேயே ரன் எதுவும் எடுக்காமல் தரங்கா, இஷாந்த் சர்மாவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 4-வது ஓவரில் கருணாரத்னேவும் டக் அவுட் ஆனார். பிறகு, வந்தவேகத்தில் 3 பவுண்டரிகள் அடித்த சண்டிமல் 18 ரன்களில் இஷாந்த் சர்மாவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதனால் 21 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது இலங்கை அணி. நல்லவேளையாக, அதன்பின் சில்வாவும் மேத்யூஸும் பொறுப்பாக ஆடினார்கள். 4-வது நாள் ஆட்டநேர முடிவில், இலங்கை அணி 18 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 63 ரன்களை எடுத்துள்ளது. சில்வா 24, மேத்யூஸ் 22 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள். கடைசி நாளன்று இலங்கை அணி வெற்றி பெற 319 ரன்கள் தேவை. இந்திய அணிக்கு 7 விக்கெட்டுகள்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com