

மிட்செல் ஜான்சனின் கிரிக்கெட் வாழ்க்கை முடிந்துவிட்டது. இன்று முடிந்த பெர்த் டெஸ்ட்டுடன் அவர் தனது கிரிக்கெட் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்.
நியூசிலாந்தின் 2-வது இன்னிங்ஸில் இடம்பெற்ற அவருடைய பந்துவீச்சு, கண்கொள்ளா காட்சியாக அமைந்தது. ஆட்டத்தின் முடிவில் நியூசிலாந்து 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்தது. அந்த 2 விக்கெட்டுகளையும் தனது வழக்கமான பவுன்சர் மூலமாக வீழ்த்தினார் ஜான்சன்.
7-வது ஓவரின்போது பெர்த் மைதானம் சுறுசுறுப்பானது. பலத்த கைத்தட்டல், ஆரவாரங்களுக்கு இடையே பந்துவீசினார் ஜான்சன். ஜான்சனின் பந்துவீச்சைப் பார்ப்பதற்காக ஆட்டத்தின் கடைசிப் பகுதியை எவ்விதக் கட்டணமும் இன்றி இலவசமாகப் பார்க்கலாம் என்று கிரிக்கெட் ஆஸ்திரேலியா அறிவித்திருந்தது. இதனால் மைதானத்தில் ரசிகர்கள் திரண்டிருந்தார்கள். ஜான்சனின் ஒவ்வொரு பந்தையும் அவர்கள் உன்னிப்பாக கவனித்தார்கள்.
இடையில் மழை வந்ததால் ஆட்டம் சிறிது நேரம் நிறுத்தப்பட்டது. இந்தச் சமயத்தில் சமூகவலைத்தளங்களில் ஜான்சன் பற்றிய நினைவலைகளைக் காணமுடிந்தது. முதல் போட்டியில் இந்திய அணியைத் திணறடித்தது, ஆஷஸ் தொடர்களில் வீசிய மிரட்டல் பந்துவீச்சு என பலரும் பலவிதமான ஆட்டங்களை நினைவுகூர்ந்தார்கள்.
3-வது ஓவரில் லதமின் விக்கெட்டை வீழ்த்தினார் ஜான்சன். ஓவர் முடித்துவிட்டு பவுண்டரி லைனுக்கு அருகே ஃபீல்டிங் செய்தபோது பலரும் அவரிடம் ஆட்டோகிராப் வாங்கினார்கள். பிறகு 5-வது ஓவரிலும் விக்கெட் கிடைத்தது. தனது வழக்கமான பவுன்சரால் குப்தில்-லின் விக்கெட்டை வீழ்த்தினார் ஜான்சன். கடைசி நாளிலும் 147 கி.மீ வேகத்தில் பந்துவீசியதைப் பார்த்த பலரும், ஏன் ஜான்சன் ஓய்வுபெறுகிறார், இன்னும் சிறிதுகாலம் ஆடலாமே என்கிற கேள்வியை எழுப்பினார்கள்.
28-வது ஓவருக்குப் பிறகு டெஸ்ட் மேட்ச் டிரா ஆனது. ஜான்சனின் கிரிக்கெட் காலம் முடிவடைந்தது. அவருடைய கடைசி இரு விக்கெட்டுகளும் பவுன்சரால் கிடைத்தன. இதைவிடவும் பொருத்தமான ஒன்று இருக்கமுடியுமா?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.