

2016 மார்ச் 11 முதல் ஏப்ரல் 3 வரை டி20 உலகக்கோப்பை போட்டி இந்தியாவில் நடைபெறுகிறது. இதற்கான போட்டிகள் பெங்களூரு, சென்னை, தர்மசாலா, மொஹலி, மும்பை, நாக்பூர், டெல்லி, கொல்கத்தா ஆகிய 8 இடங்களில் நடைபெற உள்ளதாக முன்பு அறிவிக்கப்பட்ட நிலையில் சென்னை சேப்பாக்கம் மைதானம் வாய்ப்பை இழக்க உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் கூடுதலாக ‘ஐ', ‘ஜே', ‘கே' ஆகிய 3 பார்வையாளர் மாடங்கள், முறையான அனுமதி பெறாமல் எழுப்பப்பட்டதாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்துக்கும் சென்னை மாநகராட்சிக்கும் இடையே சர்ச்சை நிலவி வருகிறது. இதனால் டி20 உலகக்கோப்பைப் போட்டி, சென்னைக்கு ஒதுக்கப்படாது என்று முதலில் செய்திகள் வெளிவந்த நிலைமையில் சென்னை உள்ளிட்ட 8 மையங்களில் டி20 போட்டி நடக்கும் என்று பிசிசிஐ அறிவித்தது.
3 கேலரிகளின் பிரச்னையைச் சரிசெய்யாவிட்டால் சென்னைக்கு ஒதுக்கப்பட்ட போட்டி ரத்து செய்யப்பட்டு, வேறொரு மைதானத்துக்கு வாய்ப்பளிக்கப்படும் என்று பிசிசிஐ தரப்பில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்துக்கு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் அந்த உதவியும் இப்போது பயனில்லாமல் போய்விட்டது. டி20 உலகக்கோப்பை போட்டியை நடத்தப்படும் வாய்ப்பை சென்னை கிட்டத்தட்ட இழந்துவிட்டது என்றே கூறமுடியும்.
சில தினங்களுக்கு முன்பு இந்தப் பிரச்னை குறித்து பேசிய பிசிசிஐ செயலாளர் அனுராக் தாக்குர், சென்னையைப் பொருத்தவரையில் சில பிரச்னைகள் உள்ளன. அதற்காக அந்த மைதானத்தை நிராகரிக்கவில்லை. எந்தெந்த ஆட்டங்களை சென்னையில் நடத்துவது என்பதில்தான் பிரச்சினை உள்ளது. அங்கு இலங்கை வீரர்கள் விளையாட முடியாது. இதேபோல் 3 கேலரிகளில் ரசிகர்களை அனுமதிக்க முடியாத சூழல் உள்ளது. ஆனால் உலகக் கோப்பை போட்டி நடைபெறும்போது அந்த கேலரிகளை காலியாக வைக்க முடியாது என்று கூறினார். ஆனால் கடந்த சில நாள்களாக இதுதொடர்பாக ஏற்பட்ட நடவடிக்கைகளின்படி டி20 போட்டியை நடத்தும் வாய்ப்பை இழக்க உள்ளது சென்னை.
சென்னையில் இந்தியா ஆடாத போட்டியை நடத்தலாம். அதனால் 3 கேலரிகள் இல்லாவிட்டாலும் பெரிய இழப்பு இல்லை என்கிற பிசிசிஐயின் விளக்கத்தை ஐசிசி ஏற்றுக்கொள்ளவில்லை. சென்னையில் போட்டி நடத்துவதென்றால் எல்லா கேலரிகளும் தயாராக இருக்கவேண்டும் என்று ஐசிசி கண்டிப்புடன் கூறியதால், சென்னையில் போட்டியை நடத்தமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 3 கேலரிகள் தொடர்பாக தமிழக அரசிடமிருந்து தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்துக்குத் தகவல் எதுவும் வராததால் இந்த நல்ல வாய்ப்பை இழக்கிறது சென்னை சேப்பாக்கம். ஐசிசியின் விதிமுறைகளால் சென்னை ரசிகர்களுக்கு உதவ முடியாத நிலைமையில் உள்ளது பிசிசிஐ.
சென்னையைத் தவிர்த்த போட்டி அட்டவணை ஒன்றை பிசிசிஐக்கு அனுப்பியுள்ளது ஐசிசி. அதில் 7 கிரிக்கெட் மையங்களில் மட்டுமே உலகக்கோப்பை போட்டி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அட்டவணையை பிசிசிஐ ஏற்கும் என்றே தெரிகிறது. இதுகுறித்த அதிகாரபூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.