இந்தியா ஏ அணி 322 ரன்கள் குவித்தது; சஞ்சு, ரிஷி தவான் அபாரம்!

இந்த மூன்று பேரின் சாமர்த்தியத்தால் இந்திய ஏ அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 322 ரன்கள் எடுத்தது.
Updated on
1 min read

பெங்களூரில் நடைபெறும் இந்தியா - வங்கதேசம் ஏ அணிகளுக்கு இடையேயான அதிகாரபூர்வமற்ற முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் முதலில் ஆடிய இந்திய அணி சரிவிலிருந்து மீண்டு 322 ரன்கள் எடுத்துள்ளது.

மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட இந்த தொடரின் முதல் ஆட்டத்தில் டாஸ் வென்ற வங்கதேச ஏ அணி, ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது. உன்முக்த் சந்த் தலைமையிலான இந்திய அணியில் சுரேஷ் ரெய்னா, மணீஷ் பாண்டே, கேதார் ஜாதவ் ஆகிய நட்சத்திர வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

முதல் 5 ஓவரில் கடகடவென ரன்கள் குவித்தார்கள் தொடக்க வீரர்களான அகர்வாலும் உன்முக்த் சந்தும். ஆனால் 5-வது ஓவரில் கடைசிப் பந்தில் தன்னுடைய விக்கெட்டைப் பறிகொடுத்தார் உன்முக்த். அவர் 16 ரன்களில் அவுட் ஆனார். அதன்பிறகு இந்திய அணி தொடர்ந்து விக்கெடுகளை இழந்த வண்ணம் இருந்தது. 26-வது ஓவரின்போது 125 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்திருந்தது. நன்கு ஆடிவந்த அகர்வாலும் 56 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். மோசமான நிலையில் இந்திய ஏ அணி இருந்தபோது அணியைச் சரிவிலிருந்து மூன்று பேர் மீட்டார்கள்.

அணியின் விக்கெட் கீப்பரான சஞ்சு சாம்சன், தனக்குக் கிடைத்த வாய்ப்பை நன்குப் பயன்படுத்திக்கொண்டார். அவரும் குர்கீரத் சிங்கும் 6-வது விக்கெட்டுக்கு 102 ரன்கள் எடுத்தார்கள். குர்கீரத் சிங் 65 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவருக்குப் பிறகு வந்த ரிஷி தவான் அதிரடியாக ஆடினார். அவர் 34 பந்துகளில் 56 ரன்கள் குவித்து கடைசி வரை அவுட் ஆகாமல் இருந்தார். சஞ்சு சாம்சன் 73 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்த மூன்று பேரின் சாமர்த்தியத்தால் இந்திய ஏ அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 322 ரன்கள் எடுத்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com