கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்றுள்ள அதிரடி வீரர் ஷேவாக்குக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் சாபில் இன்று பாராட்டு விழா நடத்தப்பட்டது.
தில்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் இன்று தொடங்கிய இந்தியா தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக இந்த பாராட்டுவிழா நடைபெற்றது.
இந்திய கிரிக்கெட்டுக்கு வீரேந்திர ஷேவாக் ஆற்றிய அளப்பரிய பணிகளைப் பாராட்டி, பி.சி.சி.ஐ. செயலர் அனுராக் தாக்கூர் வெள்ளி கேடயத்தை வழங்கினார்.
பின்னர் ஷேவாக் பேசுகையில், தன்னை கிரிக்கெட் விளையாட அனுமதித்த தனது தந்தைக்கு நன்றியை தெரிவித்தார்.
தனது முதல் பயிற்சியாளர் ஏ.என். சர்மாவை குறிப்பிட்டு பாராட்டிய ஷேவாக், அவரால் தான் இந்த நிலைக்கு உயர்ந்ததாக குறிப்பிட்டார்.
தனது முதல் கேப்டன் அஜய் ஜடேஜா மற்றும் சவுரவ் கங்குலி, ராகுல் டிராவிட், அனில் கும்ப்ளே ஆகியோருக்கும் சச்சின் தெண்டுல்கருக்கும் நன்றி தெரிவித்த ஷேவாக், பல்வேறு நிலைகளிலும் தனக்கு ஆதரவு அளித்த ரசிகர்களுக்கும் நன்றி கூறினார்.
இந்நிகழ்ச்சியில் ஷேவாக் மனைவி, இரு மகன்கள் மற்றும் தாயார் கலந்து கொண்டனர்.
கடந்த 1999 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக முதல் ஒருநாள் போட்டியில் விளையாடிய ஷேவாக் 251 ஆட்டங்களில் 8273 ரன்கள் எடுத்துள்ளார். இதேபோல தனது முதல் டெஸ்ட் போட்டியிலே சதம் அடித்த அவர் 104 போட்டிகளில் 8586 ரன்கள் எடுத்துள்ளார்.