தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

நிதிப் பற்றாக்குறையால் முழுமை பெறாத வடுவூர் உள்விளையாட்டு அரங்கம்

மன்னார்குடி: திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே வடுவூரில் மத்திய அரசின் நிதியில் கட்டப்பட்டு வரும் உள்விளையாட்டு அரங்கம் முழுமை பெற கூடுதலாக ரூ. 2 கோடி தேவை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, இதற்கான கட்டுமானப் பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.

News image
Updated On :4 ஜூலை 2016, 7:01 pm

மன்னார்குடி: திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே வடுவூரில் மத்திய அரசின் நிதியில் கட்டப்பட்டு வரும் உள்விளையாட்டு அரங்கம் முழுமை பெற கூடுதலாக ரூ. 2 கோடி தேவை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, இதற்கான கட்டுமானப் பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.

சர்வதேச, தேசிய, மாநில அளவில் கபடி, வாலிபால், தொடர் ஓட்டம், கராத்தே எனப் பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு சிறப்பிடம் பெற்று தமிழகத்துக்கு மட்டுமல்லாது, ஒட்டுமொத்த இந்தியாவிற்கே பெருமை சேர்க்கும் வகையில் வீரர்கள், வீராங்கனைகளைத் தந்து வருகிற ஊர் வடுவூர். திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியிலிருந்து தஞ்சாவூர் செல்லும் சாலையில் 14 கி.மீ. தொலைவில் உள்ளது வடுவூர் கிராமம்.

வடுவூரில் உள் விளையாட்டு அரங்கம் அமைக்க வேண்டும் என்பது அந்தப் பகுதி மக்களின் நீண்ட காலத் திட்டமாகும். இந்தத்

திட்டத்துக்காக வடுவூர் வி.என். ராமசாமி ஐயங்கார் குடும்பத்தின் சார்பில் ரூ. 50 லட்சம் மதிப்பிலான ஓர் ஏக்கர் நிலம் இலவசமாக வழங்கப்பட்டது.

கடந்த 2013-ம் ஆண்டு மத்திய ரயில்வே நிலைக் குழுத் தலைவராக இருந்த டி.ஆர். பாலுவைச் சந்தித்த வடுவூர் விளையாட்டு அகாதெமியினர், பொதுமக்கள் அந்த ஊரில் விளையாட்டு அரங்கம் அமைக்க மத்திய அரசிடம் அனுமதி பெற்றுத் தர வேண்டும் என கோரிக்கை மனுவை அளித்தனர். இதையடுத்து, மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகத்தில் அந்த மனுவை அளித்து தொடர் நடவடிக்கை மேற்கொண்டார் டி.ஆர்.பாலு.

இதைத் தொடர்ந்து, இந்தியாவிலேயே முதல் முறையாக கிராமப் பகுதிக்கு என உள் விளையாட்டு அரங்கம் அமைக்க ஒப்புதல் அளித்து, ரூ.6 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது மத்திய அரசு.

இதையடுத்து சுமார் 2,400 சதுரமீட்டரில் (அதாவது 60 மீ. நீளம், 40 மீ.அகலம்) உள் விளையாட்டு அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இதில், தரைத்தளம் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட "மேபிள்உட்' என்ற மரக் கட்டைகளால் அமைந்துள்ளது. இந்த விளையாட்டு அரங்கத்தில் கபடி, வாலிபால், கூடைப்பந்து, இறகுப்பந்து, டேபிள் டென்னிஸ்,சிலம்பம், கராத்தே, சதுரங்கம், கேரம், யோகா உள்பட பல்வேறு போட்டிகளுக்கு பயிற்சி அளிக்கவும், போட்டிகள் நடத்தும் வகையிலும் இந்த விளையாட்டு அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.

விளையாட்டுப் போட்டிகளை ஒரே நேரத்தில் 1,000 பேர் அமர்ந்து பார்க்கும் வகையில் கேலரி அமைக்கப்பட்டுள்ளது. மேலும், இதில் அலுவலகத்துக்கும், சிறப்பு விருந்தினர், விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் தங்கவும், உடை மாற்றவும் தனித் தனி அறைகளும், கழிவறைகள், குளியலறைகள், உடற்பயிற்சிக்கூடம், நடைப்பயிற்சி பாதை என அனைத்து வசதிகளும் உள்ளன.

தற்போது விளையாட்டு அரங்கத்திற்கான பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்த நிலையில், நிதிப் பற்றாக்குறையால் மீதமுள்ள 10 சதவீதப் பணிகள் முடியாமல் திறப்பு விழா தாமதமாகி வருகிறது.

இதுகுறித்து வடுவூர் விளையாட்டு அகாதெமியின் செயலர் ஆர்.சாமிநாதன் கூறியதாவது:

மத்திய அரசு ரூ. 6 கோடி நிதி வழங்கியது. இந்த நிதி முழுமையாகப் பயன்படுத்தப்பட்ட நிலையில், மேலும் நிதி தேவைப்பட்டதை அடுத்து மத்திய விளையாட்டு அமைச்சகத்தைத் தொடர்பு கொண்டு நிதிப் பற்றாக்குறை குறித்து தெரிவிக்கப்பட்டது. உள்விளையாட்டு அரங்கம் அமைக்க ரூ. 6 கோடி மட்டும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும், கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய இயலாது என்றும் தெரிவித்துவிட்டனர்.

உள்விளையாட்டு அரங்கத்தில் தரைத் தளம் அமைக்க ரூ. 1 கோடியும், உயர் தொழில்நுட்ப மின் ஒளி விளக்குகள் அமைக்க ரூ. 51 லட்சமும், நடைப்பயிற்சி பாதை, 200 மீ. ஓடுதளப் பாதை, விளையாட்டு அரங்கப் பகுதியில் புதை வடிகால் வசதி, நுழைவு வாயில் பாதை அமைக்க என ரூ. 40 லட்சமும் என மொத்தம் ரூ. 2 கோடி நிதி தேவைப்படுவதால், கட்டுமானப் பணிகள் கடந்த ஆறு மாதங்களாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.

பற்றாக்குறையாக உள்ள இந்த ரூ.2 கோடி நிதியை மக்களவை உறுப்பினர், மாநிலங்களை உறுப்பினர், சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்தோ அல்லது நன்கொடையாளர்களிடமிருந்தோ திரட்டி உள் விளையாட்டு அரங்கப் பணிகளை நிறைவு செய்ய வேண்டிய நிலை உள்ளது. தேவையான நிதி கிடைக்கப் பெற்றால் மூன்று மாதங்களுக்குள் பணிகள் முடிக்கப்பட்டு, திறப்பு விழாவை நடத்தி சர்வதேச விளையாட்டு வீரர்களை உருவாக்கும் இடமாக வடுவூர் உள்விளையாட்டு அரங்கம் அமைந்திடும் என்றார் அவர்.

பணிகள் முடிவடையாத நிலையில் வடுவூர் உள்விளையாட்டு அரங்கம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.