ஊக்க மருந்து சோதனையில் சிக்கிய மல்யுத்த வீரர் நர்சிங் யாதவைத்தொடர்ந்து, இந்திய குண்டெறிதல் வீரர் இந்திரஜித்தும் ஊக்க மருந்து சோதனையில் தோல்வி அடைந்துள்ளார்.
28 வயதாகும் இந்திரஜீத் 2014-ஆம் ஆண்டு நடைபெற்ற இஞ்சேன் ஆசிய போட்டிகளில் வெண்கலப் பதக்கம் வென்றவர். பிரேசிலின் ரியோ நகரின் வரும் ஆகஸ்ட், 5-ஆம் தேதி தொடங்க இருக்கின்ற, ஒலிம்பிக் போட்டிகளில் தடகளப்போட்டிகளில் பங்கேற்க இந்தியா சார்பாக தேர்தெடுக்கப்பட்ட முதல் வீரர் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது. இவரிடம் கடந்த மாதம் 22-ஆம் தேதி 'போட்டிக்கு வெளியேயான' ஊக்க மருந்து சோதனை நடைபெற்றது. இதில் அவர் ஆன்ரோஸ்டீரோன் மற்றும் எத்தியோகொலோன் ஆகிய இரண்டு மருந்துகளை பயன்படுத்தியிருப்பது தெரிய வந்தது.
இது தொடர்பான தகவல் வெளியானவுடன் தேசிய போதைப்பொருள் தடுப்பு ஆணையம் (நடா இந்திரஜித்தை அவருடைய பி சாம்பிளை உடனடியாக அனுப்புமாறு கேட்டுள்ளது. அந்த சோதனை முடிவின் அடிப்படையில் அவர் ரியோ ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்பது முடிவாகும் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு வேளை முடிவுகள் அவருக்கு எதிராக அமைந்தால், ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்க முடியாதது மட்டும் அல்ல; புதிய விதிகளின்படி அவருக்கு நான்கு ஆண்டுகள் போட்டிகலில் பங்கேற்க தடை விதிக்கப்படும் அபாயமும் உள்ளது.
இது தொடர்பாக இந்திரஜித் தெரிவித்திருப்பதாவது:
எனக்கு எதிராக சதி நடக்கிறது. ஒலிம்பிக் போன்ற பெரிய போட்டிகளுக்கு முன்னால் இப்படிப்பட்ட நடவடிக்கையில் யாராவது ஈடுபடுவார்களா? அரசு மற்றும் பல்வேறு விளையாட்டுத் துறை அமைப்புகள் மூலம் வீரர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து நான் வெளிப்படையாக பேசிவருகிறேன். இதுவே என்னை சிக்கலில் மாட்டி விடும் முயற்சியாக இது நடந்துள்ளது. இதுவரை நடா நடத்தியுள்ள ஐந்து சோதனைகளில் நான் தேர்வு பெற்றுள்ளேன்.
இவ்வாறு இந்திரஜித் தெரிவித்தார்,
இது தொடர்பாக நடா அமைப்பின் தலைவர் நவீன் அகர்வால் கூறுகையில் இதுவரை நிறைய விளையாட்டு வீரர்களிடம் சோதனை நடத்தப்பட்டு உள்ளது. அதில் நர்சிங் யாதவ் மற்றும் இந்திரஜித் ஆகிய இருவர் மட்டுமே ரியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கு தகுதி பெற்றுள்ள வீரர்கள் ஆவார்கள் என்று கூறினார். அதே நேரம் இந்திரஜித் ஐந்து முறை சோதனைகளில் தேர்ச்சி பெற்றுள்ளார் என்ற விஷயத்தை அவர் மறுத்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.