

கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் 11-ஆவது சுற்றில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் அசத்தலான வெற்றியைப் பெற்றுள்ளார். இதன்மூலம் 6.5 புள்ளிகளுடன் அவர் முதல் இடத்துக்கு மீண்டும் முன்னேறியுள்ளார்.
உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி வரும் நவம்பரில் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெறவுள்ளது. அதில் நடப்பு சாம்பியனான நார்வேயின் மேக்னஸ் கார்ல்சனுடன் மோதவுள்ள வீரரை தேர்வு செய்வதற்காக கேண்டிடேட்ஸ் செஸ் போட்டி நடத்தப்படுகிறது. இதில் சாம்பியன் பட்டம் வெல்லும் வீரர், உலக செஸ் போட்டியில் கார்ல்சனை எதிர்கொள்வார்.
நேற்று நடந்த 11-வது சுற்றில், போட்டியில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி முதலிடத்தில் இருக்கும் செர்ஜி கர்ஜாகினை எதிர்கொண்டார் விஸ்வநாதன் ஆனந்த். ஏற்கெனவே இதற்கு முந்தைய சுற்றில் ஆனந்த் தோற்றுப்போயிருந்ததால் இந்தச் சுற்று மிகமுக்கியமானதாகக் கருதப்பட்டது.
ஆனந்த் ஒருமுடிவுடன் களத்தில் இறங்கியது அவருடைய ஆட்டத்தின்போது தெரிந்தது. நிச்சயம் டிரா ஆகும் என்று கருதப்பட்ட இந்தச் சுற்றில் அட்டகாசமான இறுதி ஆட்டத்தால் வெற்றி பெற்று போட்டியை மேலும் பரபரப்பு ஆக்கியுள்ளார் ஆனந்த்.
பெர்லின் டிஃபன்ஸ் தொடக்கத்தை முன்வைத்தார் கர்ஜாகின். தனது பயிற்சியாளர் Grzegrz Gajewski உடன் இணைந்து இந்த ஆட்டத்துக்கு நன்கு தயாரான ஆனந்த், 10-வது நகர்த்தலில் இருந்து (Nxe5) தனது திட்டத்தை முன்வைத்தார். ‘இதற்காக என்னைத் தயார் செய்த என் பயிற்சியாளருக்கு நன்றி’ என்று பிறகு பேட்டியளித்தார் ஆனந்த். 19-வது நகர்த்தலின் போது (Qg5) இந்த ஆட்டம் டிராவில் முடியும் என்றே பலரும் எண்ணினார்கள். ஆனால் அதற்குப் பிறகு ஆட்டம் கூடுதலாக 50 நகர்த்தல் வரை சென்றது!
35-வது நகர்த்தலில் இருந்து ஆனந்த் வலுவான நிலையை எட்டினார். ஆனால் அதற்கு இறுதிப்பகுதியில் சிறப்பாக ஆடவேண்டிய அவசியம் இருந்தது. 36-வது நகர்த்தலில் (Rc8) தவறு செய்தார் கர்ஜாகின். (அதற்குப் பதிலாக f5 ஆடியிருந்தால் ஆட்டம் டிரா ஆகியிருக்கும் என்பது செஸ் நிபுணர்களின் கருத்து) 70 நகர்த்தல் வரை சென்ற இந்த ஆட்டத்தில் ஆனந்த், கடுமையாக உழைத்து வெற்றியைப் பெற்றார். இந்தப் போட்டியில், ஆனந்த் ஆடிய மிகச்சிறந்த ஆட்டமாக இது மதிப்பிடப்படுகிறது.
11 சுற்றுகளில் 6.5 புள்ளிகள் பெற்று கருணாவுடன் இணைந்து முதலிடத்தில் உள்ளார் ஆனந்த். கர்ஜாகின் 6 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளார். 5.5 புள்ளிகளுடன் 3 பேர் 3-வது இடத்தைப் பகிர்ந்துகொண்டுள்ளார்கள். மீதமுள்ள 3 சுற்றுகளில் இந்தப் போட்டி மேலும் பரபரப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. யார் வேண்டுனாமாலும் ஜெயிக்கலாம் என்கிற நிலையே இப்போதும் நீடிக்கிறது.
ஆனந்த் பேட்டி
</p>
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.