புது தில்லி: வெற்றியும், தோல்வியும் வாழ்வின் ஓர் அங்கம்; எனவே, தோல்வியை நினைத்து மனம் தளர வேண்டாம் என்று ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்றுள்ள இந்திய வீரர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆறுதல் கூறியுள்ளார்.
சுதந்திர தின உரையின்போது, ஒலிம்பிக்கில் பங்கேற்று தோல்வியடைந்துள்ள இந்திய வீரர்களை ஊக்குவிக்குமாறு பேச வேண்டும் என்று ரியோ ஒலிம்பிக்கிற்கான இந்திய நல்லெண்ணத் தூதர் சச்சின் டெண்டுல்கர் பிரதமர் மோடிக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இதை ஏற்று மோடி தனது சுட்டுரையில், "சச்சினின் எண்ணத்தை மெச்சுகிறேன். வீரர்களை ஊக்குவிக்க 15-ஆம் தேதி வரை பொறுத்திருக்க தேவையில்லை. அதை இப்போதே செய்துவிடுகிறேன். ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்றுள்ள நமது வீரர்களுக்காக இந்தியா இப்போதும் பெருமை கொள்கிறது. அவர்களது கடின உழைப்பே அவர்களை அங்கு கொண்டு சென்றுள்ளது. போட்டியின் முடிவு எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். வீரர்கள் தங்களால் இயன்ற வரையில் உறுதியுடன் சிறப்பாகச் செயல்படுவதை மட்டுமே கருத்தில் கொள்ள வேண்டும்' என்று தெரிவித்துள்ளார்.