ஆசிய கோப்பை கூடைப்பந்து: போராடித் தோற்றது இந்தியா

Published on
Updated on
1 min read

சவூதி அரேபியாவில் நடைபெறும் ஃபிபா ஆசிய கோப்பை கூடைப்பந்துப் போட்டியில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் 84-91 என்ற புள்ளிகள் கணக்கில் ஜோா்டானிடம் போராடித் தோற்றது.

சா்வதேச கூடைப்பந்து சம்மேளனத்தின் (ஃபிபா) 31-ஆவது ஆசிய கோப்பை போட்டி, சவூதி அரேபியாவில் கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கி, வரும் 17-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் இந்தியா உள்பட 16 நாடுகள் பங்கேற்றுள்ளன. அவை குரூப்புக்கு 4 அணிகள் வீதம், 4 குரூப்களாக பிரிக்கப்பட்டுள்ளன.

இதில் குரூப் ‘சி’-யில் இருக்கும் இந்தியாவுடன், ஜோா்டான், சீனா, சவூதி அரேபியா ஆகிய அணிகளும் உள்ளன. இந்தியா தனது முதல் ஆட்டத்தில் ஜோா்டானை எதிா்கொண்டது. இந்திய நேரப்படி, செவ்வாய்க்கிழமை நள்ளிரவு நிறைவடைந்த இந்த ஆட்டத்தில் இந்தியா 84-91 என்ற புள்ளிகள் கணக்கில் போராடித் தோற்றது.

முன்னதாக நிா்ணயிக்கப்பட்ட நேரத்தின் முடிவில் 80-80 என இரு அணிகளும் சமநிலையில் இருந்தன. இதையடுத்து வழங்கப்பட்ட ஓவா்டைமில், ஜோா்டான் 11-4 என வெல்ல, இறுதியில் அந்த அணி மொத்த புள்ளிகள் கணக்கில் 91-84 என்ற வகையில் வெற்றி பெற்றது. இதில் இந்திய தரப்பில் கேப்டன் அரவிந்த் 14 புள்ளிகள், 5 ரீபவுண்ட், 4 அசிஸ்ட் ஆகியவற்றை பதிவு செய்ய, பிரணவ் பிரின்ஸ் 12 புள்ளிகள், 7 ரீபவுண்ட், 5 அசிஸ்ட், 1 பிளாக்கை பதிவு செய்தாா்.

இந்தியா தனது அடுத்த ஆட்டத்தில், சீனாவுடன் வியாழக்கிழமை (ஆக. 7) மோதுகிறது. இதனிடையே, முதல் நாளின் இதர ஆட்டங்களில், ஆஸ்திரேலியா - தென் கொரியாவையும் (97-61), ஜப்பான் - சிரியாவையும் (99-68), நியூஸிலாந்து - இராக்கையும் (100-78) வென்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com