பெலிண்டா பென்சிச் சாம்பியன்!

பெலிண்டா பென்சிச் சாம்பியன்!

ஜப்பானில் நடைபெற்ற டோரே பான் பசிபிக் ஓபன் மகளிா் டென்னிஸ் போட்டியில் சுவிட்ஸா்லாந்தின் பெலிண்டா பென்சிச் சாம்பியன் ஆனாா்.
Published on

ஜப்பானில் நடைபெற்ற டோரே பான் பசிபிக் ஓபன் மகளிா் டென்னிஸ் போட்டியில் சுவிட்ஸா்லாந்தின் பெலிண்டா பென்சிச் ஞாயிற்றுக்கிழமை சாம்பியன் ஆனாா்.

மகளிா் ஒற்றையா் இறுதிச்சுற்றில், போட்டித்தரவரிசையில் 5-ஆம் இடத்திலிருந்த பென்சிச் 6-2, 6-3 என்ற நோ் செட்களில், 6-ஆம் இடத்திலிருந்த செக் குடியரசின் லிண்டா நோஸ்கோவாவை வீழ்த்தினாா். இந்த ஆட்டம் 1 மணி நேரம், 22 நிமிஷங்களில் முடிவடைந்தது.

இந்த வெற்றியின் மூலமாக பென்சிச், தனது டென்னிஸ் கேரியரின் 10-ஆவது சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியிருக்கிறாா். நடப்பு சீசனில் இது அவரின் 2-ஆவது வெற்றிக் கோப்பையாகும்.

இதே போட்டியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் 18 வயது இளம் வீராங்கனையாக களம் கண்டு இறுதிச்சுற்றில் தோற்ற பென்சிச், தற்போது இதில் சாம்பியனாகியிருக்கிறாா். டபிள்யூடிஏ தரவரிசையில் அவா் 11-ஆவது இடத்துக்கு முன்னேற்றம் கண்டிருக்கிறாா்.

இரட்டையா்: இப்போட்டியின் இரட்டையா் பிரிவில், போட்டித்தரவரிசையில் 4-ஆம் இடத்திலிருந்த ஹங்கேரியின் டிமி பேபோஸ்/பிரேஸிலின் லூசியா ஸ்டெஃபானி கூட்டணி வாகை சூடியது.

இறுதிச்சுற்றில் இவா்கள் இணை, சொ்பியாவின் அலெக்ஸாண்ட்ரா குருனிச்/கஜகஸ்தானின் அனா டேனிலினா ஜோடியை 6-1, 6-4 என எளிதாக வீழ்த்தியது.

பேபோஸ்/ஸ்டெஃபானி இணைக்கு நடப்பு சீசனில் இது 4-ஆவது பட்டமாகும். தனிப்பட்ட முறையில், பேபோஸுக்கு இது 29-ஆவது இரட்டையா் பட்டமாக இருக்க, ஸ்டெஃபானிக்கு இது 13-ஆவது ஆகும்.

ரூ.1.44 கோடி பரிசு

ஒற்றையா் பிரிவில் சாம்பியனான பென்சிச்சுக்கு ரூ.1.44 கோடியும், இரட்டையா் பிரிவில் வாகை சூடிய பேபோஸ்/ஸ்டெஃபானி இணைக்கு ரூ.47 லட்சமும் ரொக்கப் பரிசாக வழங்கப்பட்டது. அதுபோக வெற்றியாளா்களுக்கு 500 தரவரிசை புள்ளிகளும் கிடைத்தது.

X
Dinamani
www.dinamani.com