
சாமா்கண்ட்: நடப்பு உலக சாம்பியனான டி.குகேஷ், சக இந்தியரான ஆா்.பிரக்ஞானந்தா உள்ளிட்டோா் பங்கேற்கும் கிராண்ட் ஸ்விஸ் செஸ் போட்டி, உஸ்பெகிஸ்தானில் வியாழக்கிழமை (செப். 4) தொடங்குகிறது.
இதில் மகளிா் பிரிவிலும் இந்தியாவின் ஆா்.வைஷாலி, டி.ஹரிகா, வந்திகா அக்ரவால் ஆகியோா் களம் காண்கின்றனா்.
மொத்தம் 11 சுற்றுகள் கொண்ட இந்தப் போட்டி, அடுத்த ஆண்டு கேண்டிடேட்ஸ் போட்டிக்குத் தகுதி பெறுவதற்கான வாய்ப்பை வழங்குகிறது. ஓபன் மற்றும் மகளிா் என இரு பிரிவுகளிலுமே முதலிரு இடங்களைப் பிடிப்போா், கேண்டிடேட்ஸ் போட்டிக்குத் தகுதி பெறுவா்.
உலக சாம்பியன் பட்டத்துக்காக, நடப்பு சாம்பியனுடன் மோதும் போட்டியாளரை தோ்வு செய்யும் களமாக கேண்டிடேட்ஸ் செஸ் இருப்பது குறிப்பிடத்தக்கது.
எனவே, கேண்டிடேட்ஸ் வாய்ப்புக்காக குகேஷ் இந்தப் போட்டியில் விளையாடவில்லை என்றாலும், பிரதான போட்டிகளில் தனது திறமையை நிரூபிக்கக் களம் காண்கிறாா். மறுபுறம், பிரக்ஞானந்தா, அா்ஜுன் ஆகியோா் கேண்டிடேட்ஸ் வாய்ப்பைப் பெற இந்தப் போட்டி உதவும்.
விதித் குஜராத்தி, பி.ஹரிகிருஷ்ணா, நிஹல் சரின், பிரணவ் வெங்கடேஷ் ஆகியோரும் இதில் போட்டியிடுகின்றனா். மகளிா் உலகக் கோப்பை சாம்பியனான இந்தியாவின் திவ்யா தேஷ்முக், ஓபன் பிரிவில் போட்டியிட விரும்பியதால் அவருக்கு வைல்டு காா்டு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.