முன்னாள் சாம்பியன் மேற்கிந்தியத் தீவுகள் அணியை 23 ரன்கள் வித்தியாசத்தில் போராடி வென்றது இலங்கை.
போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்ட மே.இ.தீவுகளும், அரையிறுதிக்கு தகுதி பெற நூலிழை வாய்ப்புள்ள இலங்கையும் செஸ்டர் லீ ஸ்ட்ரீட்டில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் மோதின.
முதலில் ஆடிய இலங்கை அவிஷ்கா பெர்ணான்டோவின் அதிரடி சதத்தால் 338/6 ரன்களை குவித்தது. இளம் வீரர் அவிஷ்கா பெர்ணாண்டோ, 2 சிக்ஸர், 9 பவுண்டரியுடன் 103 பந்துகளில் 104 ரன்கள் குவித்து அசத்தினார். பின்னர் ஆடிய மே.இ.தீவுகள் 315/9 ரன்களைக் குவித்து தோல்வியுற்றது.
இந்நிலையில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தை பிரபல பாப் பாடகி ரிஹான்னா நேரில் வந்து கண்டுகளித்தார். ரிஹான்னா, பார்படாஸைச் சேர்ந்தவர். மேற்கிந்தியத் தீவுகள் அணி என்பது பார்படாஸ், கயானா, ஜமைக்கா, டிரினிடாட் டொபகோ, லீவேர்ட், விண்ட்வேர்ட் தீவுகள் ஆகிய ஆறு கிரிக்கெட் சங்கங்களின் கூட்டமைப்பு ஆகும்.
பார்படாஸைச் சேர்ந்த ரிஹான்னா, தற்போது லண்டனில் வசித்து வருகிறார். இதனால் நேற்றைய ஆட்டத்தைக் காண வந்த ரிஹான்னா, மே.இ. அணிக்குத் தன்னுடைய முழு ஆதரவைத் தெரிவித்தார். மே.இ. அணியின் கொடியைத் தாங்கிப் பிடித்து வீரர்களை உற்சாகமூட்டினார். ஆட்டம் முடிந்தபிறகு வீரர்களின் ஓய்வறைக்கு வந்து வீரர்களிடம் சிறிது நேரம் உரையாடினார்.
31 வயது ரிஹான்னாவை உலகளவில் அதிகம் சம்பாதிக்கும் பாடகி என்று ஃபோர்ப்ஸ் பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.