உலகக் கோப்பை வரலாற்றில் ஒரு தொடரில் 500 ரன்கள் குவித்து, 10 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரர் என்ற சாதனையை ஷாகிப் அல் ஹசன் படைத்துள்ளார்.
நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் வங்கதேச அணியின் ஆல்-ரௌண்டர் ஷாகிப் அல் ஹசன் அட்டகாசமான நிலையில் உள்ளார். பேட்டிங்கில் தொடர்ந்து அரைசதங்களையும், சதங்களையும் அடித்து வருகிறார். பந்துவீச்சிலும் அணிக்குத் தேவையான நேரத்தில் விக்கெட்டை வீழ்த்துகிறார்.
இந்தியாவுக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் 10 ஓவர்கள் வீசிய அவர் 41 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். குறிப்பாக துரிதமாக விளையாடி வந்த ரிஷப் பந்த் விக்கெட்டை வீழ்த்தினார். இது நடப்பு உலகக் கோப்பையில் அவருடைய 11-வது விக்கெட்டாகும்.
பிறகு பேட்டிங்கில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் மற்றொரு அரைசதத்தை அடித்தார். அரைசதம் அடித்த அவர் 66 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இந்த சிறப்பான ஆட்டத்தின்மூலம், நடப்பு உலகக் கோப்பையில் அதிக ரன்கள் குவித்த பேட்ஸ்மேன்கள் வரிசையில் ஷாகிப் 542 ரன்களுடன் 2-வது இடத்தில் உள்ளார். ரோஹித் சர்மா 544 ரன்களுடன் முதல் இடத்தில் உள்ளார்.
இதன்மூலம், ஒரு உலகக் கோப்பை தொடரில் பேட்டிங்கில் 500 ரன்கள் குவித்து, பந்துவீச்சில் 10 விக்கெட்டுகள் வீசிய முதல் வீரர் என்ற சாதனையை இவர் படைத்துள்ளார். முன்னதாக, 2007 உலகக் கோப்பை தொடரில் நியூஸிலாந்து ஆல்-ரௌண்டர் ஸ்காட் ஸ்டைரிஸ் 10 ஆட்டங்களில் விளையாடி 499 ரன்கள் குவித்து 9 விக்கெட்டுகள் வீழ்த்தியதே சாதனையாக இருந்தது.