ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் இடையிலான உலகக் கோப்பை ஆட்டம் டெளண்டானில் நடைபெற்று வருகிறது.
கடந்த இரு நாள்களாக மழை பெய்ததால் ஆடுகளம் பந்துவீச்சுக்குச் சாதகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் சர்ஃபராஸ் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். அந்த அணியில் ஷதாப்புக்குப் பதிலாக ஷாஹீன் அப்ரிடி இடம்பெற்றுள்ளார். ஆஸி. அணியில் ஸம்பாவுக்குப் பதிலாக கேன் ரிச்சர்ட்சன் இடம்பெற்றுள்ளார்.
பந்துவீச்சில் பாகிஸ்தான் அசத்தும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆஸி. தொடக்க வீரர்களான ஃபிஞ்சும் வார்னரும் ஆரம்பம் முதல் அதிரடியாக விளையாடினார்கள். முதல் 10 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 56 ரன்கள் எடுத்தார்கள். இந்த வருடம் விளையாடிய 17 இன்னிங்ஸில், ஆஸி. தொடக்க வீரர்களின் கூட்டணி 10 முறை 50 ரன்களுக்கு அதிகமாக எடுத்துள்ளது.
கேப்டன் ஃபிஞ்ச் அதிரடியாக விளையாடி 84 பந்துகளில் 4 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 82 ரன்கள் எடுத்து ஆமிர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதன்பிறகு கடகடவென ரன்கள் சேர்த்தது ஆஸ்திரேலியா. ஆனால், ஸ்மித் 10 ரன்களில் வெளியேறினார். அடுத்து வந்த மேக்ஸ்வெல்லும் அதிரடியாக விளையாடினார். ஆனால் அவரால் நீண்ட நேரம் நிலைக்க முடியவில்லை. 10 பந்துகளில் 20 ரன்கள் எடுத்து ஷஹீன் ஷா அப்ரிடி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
இதையடுத்து 102 பந்துகளில் சதமடித்து அசத்தினார் டேவிட் வார்னர். இது அவருடைய 15-வது ஒருநாள் சதம். பிறகு அதிக ரன்கள் சேர்க்காமல் 107 ரன்களில் ஆட்டமிழந்தார் வார்னர்.
பாகிஸ்தான் அணி 40 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 256 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. ஷான் மார்ஷ் 16, உஸ்மான் கவாஜா 4 ரன்களுடன் விளையாடி வருகிறார்கள்.