ஆப்கானிஸ்தான் அணியை 150 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது இங்கிலாந்து.
இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் மான்செஸ்டர் ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங்கைத் தேர்வு செய்தது. முதலில் ஆடிய இங்கிலாந்து 397/6 ரன்களைக் குவித்தது. பின்னர் ஆடிய ஆப்கன் 247/8 ரன்களை மட்டுமே எடுத்துத் தோல்வியைத் தழுவியது.
ஆப்கானிஸ்தான் இளம் சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான் அதிகபட்சமாக 9 ஓவர்களில் 110 ரன்களை வாரி வழங்கினார். இதனால் உலகக் கோப்பைப் போட்டிகளில் அதிக ரன்களைக் கொடுத்தவர் என்கிற நிலைக்கு ஆளாகியுள்ளார் ரஷித் கான் (இதற்கு முன்பு, 1983-ல் 12 ஓவர்களில் 105 ரன்கள் கொடுத்தார் நியூஸிலாந்தின் மார்டின் ஸ்னீடன்). ஒருநாள் கிரிக்கெட்டில் மிக் லூயிஸ் 113 ரன்கள் கொடுத்ததே இன்னும் முதலிடத்தில் உள்ளது. அதிக ரன்கள் கொடுத்த பந்துவீச்சாளர்கள் பட்டியலில் 110 ரன்கள் கொடுத்து வஹாப் ரியாஸுடன் இணைந்து 2-ம் இடத்தில் உள்ளார் ரஷித் கான். ரஷித் கான் பந்துவீச்சில், 7 சிக்ஸர் அடித்தார் மார்கன். இதுபோல எந்தவொரு பேட்ஸ்மேனும் ஒரு பந்துவீச்சாளருக்கு எதிராக இத்தனை சிக்ஸர் அடித்ததில்லை.
இந்நிலையில் ரஷித் கானின் இந்த நிலைமையைக் கிண்டல் அடித்து ட்வீட் செய்துள்ளது ஐஸ்லாந்து கிரிக்கெட் வாரியம்.
உலகக் கோப்பை வரலாற்றில் ஆப்கானிஸ்தானின் முதல் சதத்தை அடித்துள்ளார் ரஷித் கான். 56 பந்துகளில் 110 ரன்கள். உலகக் கோப்பைப் போட்டியில் அதிக ரன்கள் எடுத்த பந்துவீச்சாளர். நன்கு விளையாடியுள்ளீர்கள் இளம் வீரரே என்று ரஷித் கானை நக்கலடிக்கும் விதமாக ட்வீட் வெளியிட்டுள்ளது.
ஆனால், இதற்கு கிரிக்கெட் வீரர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளார்கள். பிஷன் பேடி, லூக் ரைட், ஸ்டூவர்ட் பிராட், ஆர்ச்சர் எனப் பலரும் ரஷித் கானுக்கு ஆதரவாகவும் ஐஸ்லாந்து கிரிக்கெட் வாரியத்துக்கு எதிராகவும் ட்வீட் செய்துள்ளார்கள்.