உலகக் கோப்பைப் போட்டியில் விராட் கோலியின் விக்கெட்டை வீழ்த்த விருப்பப்படுகிறேன். ஐபிஎல்-லில் என்னால் அவருடைய விக்கெட்டை எடுக்க முடியாமல் போய்விட்டது. லெக் ஸ்பின்னர் ஷ்ரேயஸ் கோபால் ஒவ்வொரு முறையும் அவருடைய விக்கெட்டை எடுத்துவிட்டார் என்று ஒரு பேட்டியில் கூறினார் இங்கிலாந்து ஆல்ரவுண்டர் ஜோஃப்ரா ஆர்ச்சர்.
இங்கிலாந்தில் நேற்று நடைபெற்ற கேப்டன்கள் சந்திப்பில் ஆர்ச்சரின் பேட்டி குறித்த கேள்வியை எதிர்கொண்டார் கோலி. அதற்கு அவர் கூறியதாவது:
அவர் அப்படிச் சொன்னாரா? இது எனக்குப் புதிய தகவல். இது இங்கிலாந்து கேப்டனுக்கும் புதிய தகவலாக இருக்கும். இதுபோன்ற விஷயங்களில் நான் கவனம் செலுத்தமாட்டேன்.
அணிக்காக நன்றாக விளையாடுவதை, நான் விளையாடும் ஒவ்வொரு ஆட்டத்திலும் தாக்கத்தை ஏற்படுத்துவதைப் பெருமையாக எண்ணுவேன். ஜோஃப்ரா என்னைப் பற்றி அப்படிச் சொன்னால் அதைப் பாராட்டாக எண்ணிக்கொள்கிறேன். ஏனெனில் அவரே ஓர் உலகத் தரமான பந்துவீச்சாளர் தான்.
ஐபிஎல் போட்டியில் அவர் விளையாடும் விதத்தைப் பார்த்துள்ளேன். உலகம் முழுக்க சிறப்பாக விளையாடியுள்ளார். அதனால் தான் அவர் மிக விரைவாக இங்கிலாந்து அணியில் உலகக் கோப்பை போன்ற ஒரு போட்டிக்குச் சேர்க்கப்பட்டுள்ளார்.
அவர் ஒரு எக்ஸ் ஃபேக்டராக இருப்பார் என எண்ணுகிறேன். ஏனெனில் அவரிடம் எல்லாவிதமான திறமைகளும் உள்ளன. மற்ற வீரர்களை விடவும் வித்தியாசமாக உள்ளார். மிக வேகமாகப் பந்துவீசக்கூடியவர். அவர் ஓடிவருவதைப் பார்க்கும்போது அதைக் கணிக்கமுடியாது. இந்த உலகக் கோப்பைப் போட்டியில் அவருடைய திறமை அதிக எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. அவருடைய பந்துவீச்சை நான் கவனிப்பேன். அவர் மிகவும் ஈர்க்கக்கூடிய கிரிக்கெட் வீரராக உள்ளார் என்று கூறியுள்ளார் கோலி.