ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சன் ஐபிஎல் கிரிக்கெட்டில் 3,000 ரன்கள் என்ற சாதனையை எட்டியுள்ளார்.
ஐபிஎல்-இன் இன்றைய (திங்கள்கிழமை) ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்று முதலில் பேட் செய்த ராஜஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்துள்ளது. இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சஞ்சு சாம்சன் 82 ரன்கள் எடுத்தார்.
இந்த இன்னிங்ஸில் ஐபிஎல் கிரிக்கெட்டில் மட்டும் 3,000 ரன்கள் என்ற சாதனையை சாம்சன் எட்டினார். ஐபிஎல் கிரிக்கெட்டில் 3,000 ரன்களைக் கடந்த 19-வது வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
6,185 ஐபிஎல் ரன்களுடன் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் வரிசையில் விராட் கோலி முதலிடத்தில் உள்ளார். இவருக்கு அடுத்தபடியாக ஷிகர் தவான் (5,627), ரோஹித் சர்மா (5,556), சுரேஷ் ரெய்னா (5,523) மற்றும் டேவிட் வார்னர் (5,449) ஆகியோர் உள்ளனர்.
அதேசமயம், நடப்பு ஐபிஎல் சீசனில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் வரிசையிலும் சாம்சன் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார். நடப்பு சீசனில் மட்டும் அவர் 10 ஆட்டங்களில் 433 ரன்கள் எடுத்துள்ளார்.