கடைசி ஓவரை ஸ்டாய்னிஸுக்கு வழங்கியது பற்றி விளக்கம் அளித்துள்ளார் தில்லி கேபிடல்ஸ் அணி கேப்டன் ரிஷப் பந்த்.
ஐபிஎல் போட்டியின் 22-வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூா் 1 ரன் வித்தியாசத்தில் தில்லி கேபிடல்ஸை வீழ்த்தியது.
ஆமதாபாத்தில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் ஆடிய பெங்களூா் 20 ஓவா்களில் 5 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் சோ்த்தது. அடுத்து ஆடிய தில்லி 20 ஓவா்களில் 4 விக்கெட் இழப்புக்கு 170 ரன்கள் அடித்து வீழ்ந்தது. கடைசிப் பந்தில் ஆறு ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற நிலையில் ரிஷப் பந்தால் பவுண்டரி மட்டுமே அடிக்க முடிந்தது. பந்த் 6 பவுண்டரிகளுடன் 58, ஹெட்மயா் 2 பவுண்டரிகள், 4 சிக்ஸா்களுடன் 53 ரன்கள் சோ்த்து ஆட்டமிழக்காமல் இருந்தனா்.
இந்த வெற்றியினால் புள்ளிகள் பட்டியலில் பெங்களூர் அணி மீண்டும் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.
ஆர்சிபி அணி பேட்டிங் செய்தபோது அமித் மிஸ்ராவுக்கு ஒரு ஓவர் மீதமிருந்தும் கடைசி ஓவரை ஸ்டாய்னிஸ் வீசினார். அந்த ஓவரில் டி வில்லியர்ஸின் விளாசலால் ஆர்சிபி அணிக்கு 23 ரன்கள் கிடைத்தது. அந்த ஓவரில் மூன்று சிக்ஸர்களும் ஒரு பவுண்டரியும் அடிக்கப்பட்டன. இதனால் விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளார் ரிஷப் பந்த்.
கடைசி ஓவரை ஸ்டாய்னிஸுக்கு வழங்கியது பற்றி தில்லி அணி கேப்டன் ரிஷப் பந்த் கூறியதாவது:
தோல்வியடைந்துள்ளதால் ஏமாற்றமாக உள்ளது. இந்த ஆடுகளத்தில் 10, 15 ரன்கள் கூடுதலாக எடுத்துவிட்டார்கள். ஆர்சிபி அணி பேட்டிங் செய்தபோது கடைசி ஓவர்களில் சுழற்பந்துவீச்சாளர்களுக்குப் போதிய உதவி ஆடுகளத்திலிருந்து கிடைக்கவில்லை. இதனால் தான் கடைசி ஓவரை ஸ்டாய்னிஸுக்கு வழங்கினேன்.
நாங்கள் பேட்டிங் செய்தபோது ஹெட்மையர் சிறப்பாக விளையாடினார். அவரால் தான் இலக்கை நெருங்கினோம். கடைசி ஓவரில் யார் பேட்டிங் செய்கிறார்களோ அவர் வேலையை முடிக்க வேண்டும் எனப் பேசிக்கொண்டோம். கடைசியில் ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்துவிட்டோம் என்றார்.