பஞ்சாப் அணியின் அபார பந்துவீச்சால் சென்னை அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து படுதோல்வியைச் சந்தித்தது.
ஐபிஎல் தொடரின் 11-ஆவது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இன்று மோதின. மும்பையின் பார்போர்ன் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. பஞ்சாப் அணியில் கேப்டன் மயங் அகர்வால், ஷிகர் தவான் இருவரும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் கண்டனர்.
ஆனால் மயங் அகர்வால் 4 ரன்களில் வெளியேறி ஏமாற்றமளித்தார். அடுத்து வந்த ராஜபக்சவும் 9 ரன்கள் எடுத்து வந்த வேகத்திலேயே வெளியேறினார். தொடர்ந்து களமிறங்கிய லியம் லிவிங்ஸ்டன், ஷிகர் தவானுடன் இணைந்து நல்ல பாட்னர்ஷிப்பை அமைத்தார். பஞ்சாப் அணியின் ரன்கள் 109 இருந்தபோது ஷிகர் தவான் 33 ரன்களில் ஆட்டமிழந்தார்.
மற்றொரு புறம் அதிரடியாக விளையாடிய லியம் லிவிங்ஸ்டன் அரைசதம் கடந்து அசத்தினார். அவர் 32 பந்துகளில் 60 ரன்கள் எடுத்து தனது விக்கெட்டை பறிகொடுத்தார். பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 180 ரன்கள் எடுத்தது. சென்னை அணியில் அதிகபட்சமாக ஜோர்டான், டுவெய்ன் பிரெடோரியஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதையடுத்து 181 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் உத்தப்பா, ரித்துராஜ் கெய்க்வாட் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். பின், மொயின் அலி, ராயுடு, ஜடேஜா ஆகியோரும் பஞ்சாப் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்களை இழந்தனர்.
இருப்பினும், ஷிவம் டுபே மற்றும் தோனியின் நிதான ஆட்டத்தில் சென்னை ரன்களை சேர்த்தது. அதிரடியாக விளையாடிய ஷிவம் டுபே 57 ரன்களிலும், தோனி 23 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
இறுதியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 18 ஓவர் முடிவில் 126 ரன்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 54 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
சிறப்பாக பந்து வீசிய பஞ்சாப் அணியின் ராகுல் சஹார் 3 விக்கெட்களையும், லியம் லிவிங்ஸ்டன் மற்றும் வைபவ் அரோரா தலா இரண்டு விக்கெட்களையும் வீழ்த்தினர்.