டெல்லி அணி எதிரான ஆட்டத்தில் ஜாஸ் பட்லர் அதிரடி காரணமாக நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ராஜஸ்தான் அணி 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 222 ரன்கள் குவித்தது.
ஐபிஎல் தொடரின் 34ஆவது ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்து வீச்சைத் தேர்வு செய்தது. ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜாஸ் பட்லர், தேவ்தத் படிக்கல் ஆகியோர் களமிறங்கினர்.
இருவரும் டெல்லி அணியின் பந்துவீச்சை பவுண்டரிகளாகவும், சிக்ஸர்களாகவும் பறக்க விட்டனர். 35 பந்துகளை சந்தித்த படிக்கல் 54 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய கேப்டன் சஞ்சு சாம்சனும் அதிரடி காட்ட ராஜஸ்தான் அணியின் ரன் ரேட் மளமளவென உயர்ந்தது. தொடர்ந்து அதிரடியில் கலக்கிய பட்லர் 57 பந்துகளில் சதம் கடந்து அசத்தினார். இந்த சீசனில் இது இவருக்கு 3ஆவது சதமாகும்.
அவர் 65 பந்துகளில் 116 ரன்கள் எடுத்திருந்தபோது தனது விக்கெட்டை பறிகொடுத்தார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 222 ரன்கள் குவித்தது. நடப்பு ஐபிஎல் சீசனில் இதுவே அதிகபட்ச ஸ்கோர். சஞ்சு சாம்சன் 46(19), ஹெத்மயர் ஒரு ரன்னுடனும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.