டெல்லி கேபிடல்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் 157 கி.மீ. வேகத்தில் பந்துவீசிய உம்ரான் மாலிக், நடப்பு ஐபிஎல் சீசனில் அதிவேகமாகப் பந்துவீசியவர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
ஐபிஎல்-இன் இன்றைய (வியாழக்கிழமை) ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் விளையாடி வருகின்றன. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் விளையாடுகிறது என்றாலே உம்ரான் மாலிக் இன்றைய ஆட்டத்தில் எந்த வேகத்தில் பந்துவீசினார் என்பதுதான் கேள்வியாக இருக்கும்.
நடப்பு ஐபிஎல் சீசன் முழுவதிலும் 150 கி.மீ. வேகத்துக்கு மேல் தொடர்ச்சியாகப் பந்துவீசி அசத்தி வரும் உம்ரான் மாலிக், சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் இரண்டு முறை 154 கி.மீ. வேகத்தில் பந்துவீசி அசத்தினார்.
இதையும் படிக்க | வார்னர், பாவெல் அதிரடி: டெல்லி 207 ரன்கள் குவிப்பு
இந்த நிலையில், டெல்லி கேபிடல்ஸுடனான இன்றைய ஆட்டத்தில் கடைசி ஓவரை வீசிய உம்ரான் மாலிக் 4-வது பந்தை 157 கி.மீ. வேகத்துக்கு வீசினார். இதன்மூலம், நடப்பு ஐபிஎல் சீசனில் அதிகவேகமாகப் பந்துவீசியவர் என்ற தனது முந்தைய சாதனையை தானே முறியடித்துள்ளார் உம்ரான் மாலிக்.
குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் 4 ஓவர்களில் 25 ரன்கள் மட்டுமே கொடுத்து 5 விக்கெட் வீழ்த்திய உம்ரான், அதற்கு அடுத்த இரண்டு ஆட்டங்களிலும் விக்கெட் வீழ்த்த முடியாமல் ரன்களை நிறைய வழங்கி வருகிறார்.
இன்றைய ஆட்டத்தில் 157 கி.மீ. வேகத்தில் வீசிய அவரது பந்துகூட பவுண்டரிக்குதான் சென்றது. இந்த ஆட்டத்தில் 4 ஓவர் வீசிய உம்ரான் மாலிக் விக்கெட் வீழ்த்தாமல் 52 ரன்களை கொடுத்துள்ளார். இதே ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் வீரர் அன்ரிச் நோர்க்கியா 150 கி.மீ. வேகத்துக்குப் பந்துவீசியுள்ளார். பவர் பிளே முடிவில் அவருக்கு இன்னும் இரண்டு ஓவர் மீதமுள்ளது.