அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக சிஎஸ்கே வீரர் ஷேன் வாட்சன் அறிவித்துள்ளார்.
59 டெஸ்டுகள், 199 ஒருநாள், 56 டி20 போட்டிகளில் விளையாடிய ஆஸி. வீரர் ஷேன் வாட்சன் கடந்த 2016 மார்ச் மாதம் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இந்தியாவில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையுடன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார்.
இதையடுத்து 2018-ல் ஷேன் வாட்சனை ரூ. 4 கோடிக்குத் தேர்வு செய்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. அதே வருடம் ஐபிஎல் கோப்பையை சிஎஸ்கே அணி வெல்ல வாட்சன் முக்கியக் காரணமாக இருந்தார். அதற்கு முன்பு ராஜஸ்தான் ராயல்ஸ், ஆர்சிபி அணிகளுக்காக விளையாடியுள்ள வாட்சன், 145 ஐபிஎல் ஆட்டங்களில் விளையாடியுள்ளார். அவற்றில் 43 ஆட்டங்கள் சிஎஸ்கேவுக்காக விளையாடியுள்ளார்.
இந்நிலையில் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் தான் ஓய்வு பெறுவதாக இன்று அறிவித்துள்ளார் ஷேன் வாட்சன்.
சிஎஸ்கே அணிக்கான எனது கடைசி ஆட்டத்தை விளையாடி விட்டேன். கடந்த மூன்று வருடங்களாக அவர்கள் எனக்கு நல்ல முறையில் மதிப்பளித்தார்கள் என்று ஓய்வு குறித்து வெளியிட்டுள்ள விடியோவில் தெரிவித்துள்ளார்.