முதல் ஆட்டத்தில் மும்பையைத் தோற்கடித்த சென்னை அணி அடுத்த ஆட்டத்தில் ராஜஸ்தானிடம் தோல்வியடைந்தது. 3-வது ஆட்டத்தில் தில்லி கேபிடல்ஸ் அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பா் கிங்ஸ் அணியைத் தோற்கடித்தது. அந்த ஆட்டத்தில் முதலில் களமிறங்கிய தில்லி அணி நிா்ணயிக்கப்பட்ட 20 ஓவா்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 175 ரன்கள் குவித்தது. அடுத்து பேட் செய்த சென்னை அணி 20 ஓவா்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 131 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதனால் புள்ளிகள் பட்டியலில் தொடர்ந்து கடைசி இடத்தில் உள்ளது சென்னை அணி. நாளைய ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக விளையாடுகிறது. இந்நிலையில் சிஎஸ்கே இணையத்தளத்துக்கு அளித்த பேட்டியில் சிஎஸ்கே பயிற்சியாளர் பிளெமிங் கூறியதாவது:
சரியான சமயத்தில் ஆறு நாள்களுக்கு ஓய்வு கிடைத்துள்ளது. ஏனெனில் முதல் மூன்று ஆட்டங்களை விரைவாக ஆடி முடித்தோம். மூன்று ஆட்டங்களும் வெவ்வேறு மைதானங்களில் நடைபெற்றன. ஆடுகளத்துக்கு வெளியேயும் சவால்களை நாங்கள் எதிர்கொண்டோம். இந்த ஓய்வை நன்குப் பயன்படுத்தியுள்ளோம். அடுத்து என்ன செய்யவேண்டும் என்பதில் தெளிவு கிடைத்துள்ளது. அதற்குரிய விதத்தில் பயிற்சி எடுத்துள்ளோம்.
துபையில் எங்களுடைய அடுத்த ஐந்து ஆட்டங்களில் நான்கை விளையாடுகிறோம். இதன்மூலம் மைதானத்தின் சூழலை அறிந்துகொள்ள இது மிகவும் உதவும். கடந்தமுறை துபையில் விளையாடியபோது தில்லி அணியால் தோற்கடிக்கப்பட்டோம். பல விஷயங்களில் நாங்கள் நன்றாக விளையாடவில்லை. அவற்றைச் சரிசெய்ய முயன்றுள்ளோம். காயத்திலிருந்து மீண்டு நாளைய ஆட்டத்துக்கான அணித் தேர்வில் ராயுடுவும் பிராவோவும் உள்ளார்கள் என்றார்.