கொல்கத்தா அணியின் வெற்றிக்குப் பாராட்டு தெரிவித்த சச்சினுக்கு அந்த அணியின் இணை உரிமையாளர் ஷாருக் கான் நன்றி தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் போட்டியின் 12-ஆவது லீக் ஆட்டத்தில் 37 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை தோற்கடித்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்.
முன்னதாக முதலில் பேட் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் குவித்தது. பின்னர் ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 137 ரன்கள் சேர்த்து தோல்வி கண்டது.
இந்த வருடப் போட்டியில் இதுவரை 3 ஆட்டங்களில் விளையாடியுள்ள கொல்கத்தா, 2-ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. அதேநேரத்தில் முதல் இரு ஆட்டங்களிலும் வெற்றி பெற்றிருந்த ராஜஸ்தான், 3-ஆவது ஆட்டத்தில் தோல்வியை சந்தித்துள்ளது.
இதுவரை அனைத்து அணிகளும் தலா 3 ஆட்டங்களில் விளையாடியுள்ளன. புள்ளிகள் பட்டியலில் தில்லி அணி முதலிடத்திலும் கொல்கத்தா அணி 2-ம் இடத்திலும் உள்ளன.
கொல்கத்தா அணியின் வெற்றியைப் பாராட்டி சச்சின் ட்வீட் வெளியிட்டுள்ளார். கொல்கத்தா வெற்றியில் ஷுப்மன் கில், ரஸ்ஸல், மார்கன், நாகர்கோட்டி ஆகியோர் பங்களித்தது குறித்து ட்வீட் வெளியிட்டார். இதற்கு நன்றி தெரிவித்து கேகேஆர் அணியின் இணை உரிமையாளர் ஷாருக் கான் கூறியதாவது:
இதற்குப் பிறகு நான் என்ன சொன்னாலும் கொல்கத்தா வீரர்கள் அதை எடுத்துக்கொள்ள மாட்டார்கள். மிகச்சிறந்த மனிதரே அதைப் பற்றி கூறிவிட்டார். அணியில் உள்ள இளைஞர்களுக்கு மற்றவர்கள் ஆதரவளிப்பதைக் காணும்போது மகிழ்ச்சியாக உள்ளது என்றார்.