ஐபிஎல் போட்டியிலிருந்து தில்லி கேபிடல்ஸ் அணியின் பிரபல சுழற்பந்துவீச்சாளர் அமித் மிஸ்ரா விலகியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஐக்கிய அரபு அமீரகத்தில் துபை, அபுதாபி, ஷாா்ஜா ஆகிய மைதானங்களில் ஐபிஎல் போட்டி நடைபெற்று வருகிறது. இப்போட்டி நவம்பா் 10 அன்று நிறைவுபெறுகிறது.
இந்நிலையில் ஐபிஎல் போட்டியிலிருந்து காயம் காரணமாக தில்லி கேபிடல்ஸ் அணியின் பிரபல சுழற்பந்துவீச்சாளர் அமித் மிஸ்ரா விலகியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏன்என்ஐ செய்தி நிறுவனத்திடம் தில்லி அணியைச் சேர்ந்த ஒருவர் இத்தகவலை உறுதி செய்துள்ளார். கடந்த சனிக்கிழமையன்று கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் நிதிஷ் ராணா கொடுத்த கேட்சைத் தனது பந்துவீச்சின் போது பிடிக்க முயன்றார் மிஸ்ரா. அப்போது அவருடைய விரல்களில் காயம் ஏற்பட்டது.
37 வயது மிஸ்ரா, இந்த வருட ஐபிஎல் போட்டியில் விளையாடிய மூன்று ஆட்டங்களில் 0/23, 2/35, 1/14 எனச் சிறப்பாகப் பந்துவீசியதால் இவருடைய விலகல் தில்லி அணிக்குப் பின்னடைவாக இருக்கப் போகிறது.