காயம் இந்தளவுக்குத் தீவிரமாகும் என எதிர்பார்க்கவில்லை: ஐபிஎல் போட்டியிலிருந்து விலகிய மிஸ்ரா

ஓரிரு ஆட்டங்களில் மட்டும் தான் விளையாட முடியாமல் போகும் என நினைத்தேன்...
காயம் இந்தளவுக்குத் தீவிரமாகும் என எதிர்பார்க்கவில்லை: ஐபிஎல் போட்டியிலிருந்து விலகிய மிஸ்ரா

ஐபிஎல் போட்டியிலிருந்து தில்லி கேபிடல்ஸ் அணியின் பிரபல சுழற்பந்துவீச்சாளர் அமித் மிஸ்ரா விலகியுள்ளார். 

ஐக்கிய அரபு அமீரகத்தில் துபை, அபுதாபி, ஷாா்ஜா ஆகிய மைதானங்களில் ஐபிஎல் போட்டி நடைபெற்று வருகிறது. இப்போட்டி நவம்பா் 10 அன்று நிறைவுபெறுகிறது. 

இந்நிலையில் ஐபிஎல் போட்டியிலிருந்து காயம் காரணமாக தில்லி கேபிடல்ஸ் அணியின் பிரபல சுழற்பந்துவீச்சாளர் அமித் மிஸ்ரா விலகியுள்ளார். கடந்த சனிக்கிழமையன்று கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் நிதிஷ் ராணா கொடுத்த கேட்சைத் தனது பந்துவீச்சின் போது பிடிக்க முயன்றார் மிஸ்ரா. அப்போது அவருடைய விரல்களில் காயம் ஏற்பட்டது.

37 வயது மிஸ்ரா, இந்த வருட ஐபிஎல் போட்டியில் விளையாடிய மூன்று ஆட்டங்களில் 0/23, 2/35, 1/14 எனச் சிறப்பாகப் பந்துவீசியதால் இவருடைய விலகல் தில்லி அணிக்குப் பின்னடைவாக இருக்கப் போகிறது.

இதுபற்றி ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் மிஸ்ரா கூறியதாவது:

இந்தக் காயம் இவ்வளவு தீவிரமாகும் என நான் எதிர்பார்க்கவில்லை. ஓரிரு ஆட்டங்களில் மட்டும் தான் விளையாட முடியாமல் போகும் என நினைத்தேன். இருந்தாலும் இந்த முடிவை நான் ஏற்றுக்கொண்டாக வேண்டும். கேட்ச் பிடிக்கச் சென்றபோதுதான் காயம் ஏற்பட்டது. உடற்தகுதி காரணமாக உண்டான காயம் அல்ல என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com