சிஎஸ்கே தோற்றது ஏன்?: தோனி விளக்கம்
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 21-வது ஆட்டத்தில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் 10 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தியது.
அபுதாபியில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த கொல்கத்தா 20 ஓவர்களில் 10 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய சென்னை 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 157 ரன்களே எடுத்தது.
இந்த வெற்றியின் மூலம் புள்ளிகள் பட்டியலில் 3-ம் இடத்துக்கு முன்னேறியுள்ளது கொல்கத்தா அணி. சென்னை அணி 5-ம் இடத்தில் உள்ளது.
இந்தத் தோல்வி பற்றி சிஎஸ்கே கேப்டன் தோனி கூறியதாவது:
சிஎஸ்கே பேட்டிங்கின்போது நடு ஓவர்களில் அவர்கள் இரண்டு மூன்று ஓவர்களை அருமையாக வீசினார்கள். பிறகு இரண்டு மூன்று விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்தோம். அந்தச் சமயத்தில் நாங்கள் சரியாக விளையாடியிருந்தால் ஆட்டத்தின் முடிவு வேறாக இருந்திருக்கும்.
நாங்கள் பந்துவீசியபோது புதிய பந்தில் நிறைய ரன்கள் கொடுத்தோம். கரண் சர்மா நன்கு பந்துவீசினார். அவர்களை 160 ரன்களுக்குள் பந்துவீச்சாளர்கள் கட்டுப்படுத்தினார்கள். ஓர் அணியாக நாங்கள் இந்த இலக்கைச் சரியாக விரட்டியிருக்க வேண்டும். ஆனால் பந்துவீச்சாளர்களின் முயற்சியை பேட்ஸ்மேன்கள் பாழாக்கி விட்டார்கள். கடைசி மூன்று ஓவர்களில் பவுண்டரிகளே வரவில்லை. இதுபோன்ற சந்தர்ப்பங்களில் வித்தியாசமாக ஆட முயலவேண்டும். பேக் ஆஃப் லென்த் பந்தை வீசும்போது பவுண்டரி அடிக்க வழி தேடவேண்டும். நாங்கள் சூழலுக்கு ஏற்ப எங்களை மாற்றிக்கொள்ளவில்லை என்றார்.