மும்பை இந்தியன்ஸ் அணி தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மாவும் டி காக்கும் களமிறங்குவார்கள் என்று அந்த அணியின் பயிற்சியாளர் ஜெயவர்தனே கூறியுள்ளார்.
கரோனா பரவல் காரணமாக நிகழாண்டு இந்தியாவில் நடைபெறவிருந்த ஐபிஎல் போட்டி தள்ளிவைக்கப்பட்டது. ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் செப்டம்பா் 19-ம் தேதி தொடங்கும் ஐபிஎல் போட்டி, நவம்பா் 10-ம் தேதி முடிவடைகிறது. துபை, அபுதாபி, ஷாா்ஜாவில் உள்ள மைதானங்களில் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. ஐபிஎல் அட்டவணை சமீபத்தில் வெளியிடப்பட்டது. முதல் ஆட்டத்தில் சென்னை - மும்பை அணிகள் மோதுகின்றன.
ஐபிஎல் போட்டிக்காக துபை, அபுதாபிக்குச் சென்றுள்ள அனைத்து அணி வீரர்களும் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
மும்பை இந்தியன்ஸ் அணி பற்றி அந்த அணியின் பயிற்சியாளர் ஜெயவர்தனே கூறியதாவது:
கிறிஸ் லின் அணியில் இருப்பது கூடுதல் பலம். ஆனால் ரோஹித் சர்மாவும் டி காக்கும் நல்ல இணை. நல்ல புரிதல் அவர்களிடம் உள்ளது. இருவரும் அனுபவசாலிகள். நல்ல கேப்டன்கள். எனவே அவர்கள் இருவரும் தொடக்க வீரர்களாகக் களமிறங்குவார்கள். அதை ஏன் தேவையில்லாமல் மாற்ற வேண்டும்? லின் போன்ற திறமையான வீரர்கள் கூடுதலாக இருப்பதால் தான் மும்பை அணி கடந்த சில வருடங்களாக மிக நன்றாக விளையாடி வருகிறது என்றார்.