கேப்டன் பதவியிலிருந்து தினேஷ் கார்த்திக் விலகியதற்கான காரணத்தை கேகேஆர் அணியின் முன்னாள் கேப்டன் கெளதம் கம்பீர் கூறியுள்ளார்.
கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலகியுள்ளார் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக். இதையடுத்து இங்கிலாந்து வீரர் இயன் மார்கன் கேப்டனாகத் தேர்வாகியுள்ளார்.
பேட்டிங்கில் கவனம் செலுத்துவதற்காக கேகேஆர் அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலகியுள்ளார் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக். இதையடுத்து அணியின் துணை கேப்டனான இயன் மார்கன், கேப்டனாகத் தேர்வாகியுள்ளார். கடந்த வருடம் நடைபெற்ற உலகக்கோப்பைப் போட்டியில் மார்கன் தலைமையில் இங்கிலாந்து அணி கோப்பையை வென்றது.
இந்நிலையில் தினேஷ் கார்த்திக்கின் விலகல் பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் கேகேஆர் அணியின் முன்னாள் கேப்டன் கெளதம் கம்பீர் கூறியதாவது:
இயன் மார்கனால் பெரிதளவு மாற்றம் கொண்டு வர முடியும் எனத் தோன்றவில்லை. போட்டியின் ஆரம்பத்திலிருந்து கேப்டனாக இருந்திருந்தால் அவரால் நிறைய மாற்றங்களைச் செய்திருக்க முடியும். கேப்டனுக்கும் பயிற்சியாளருக்கும் நல்ல புரிதல் இருக்கவேண்டும்.
தினேஷ் கார்த்திக்கின் விலகலால் சிறிதளவு ஆச்சர்யப்பட்டேன். கடந்த இரண்டரை வருடங்களாக அவர் கேப்டனாக உள்ளார். போட்டியின் நடுவில் யாரும் கேப்டனை மாற்ற மாட்டார்கள். கேப்டனை மாற்றும் அளவுக்கு கொல்கத்தா அணியும் மோசமாக விளையாடவில்லை.
இந்த மாற்றம் கேகேஆர் அணிக்கு வேண்டும் என்றால் போட்டியின் தொடக்கத்திலேயே செய்திருக்கவேண்டும். உலகக் கோப்பை கேப்டன் உங்கள் அணியில் உள்ளதை வைத்துப் பேசுவதால் தினேஷ் கார்த்திக்குக்குக் கூடுதல் அழுத்தம் ஏற்பட்டுள்ளது. முதலிலேயே மார்கனை கேப்டன் ஆக்கியிருக்கலாம். இதன்மூலம் தினேஷ் கார்த்திக்குக்கு அழுத்தம் ஏற்படுவதைத் தவிர்த்திருக்கலாம்.
பேட்டிங்கில் கவனம் செலுத்துவதற்காக இந்த முடிவு என ஒரு கேப்டன் சொல்வது நன்றாகத்தான் இருக்கும். ஆனால் அணி நிர்வாகம் அவர் மீது திருப்தியாக உள்ளதா இல்லையா என்கிற தகவல்கள் அவருக்குக் கிடைத்திருக்கும். எனவே இது துரதிர்ஷ்டவசமானது என்றார்.
மார்கன் தலைமையில் நேற்று விளையாடிய கேகேஆர் அணி, மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது.