ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளின் 14-வது ஆட்டம் மும்பைக்கும்-பெங்களூரு அணிகள் இடையே வான்கடே மைதானத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. டாஸ் வென்ற பெங்களூரு அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 213 ரன்களை மும்பை அணி எடுத்திருந்தது. ஆனால், 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு பெங்களூரு அணி 167 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இறுதியில் 46 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி தனது முதல் வெற்றியைப் பெற்றது.
இந்த ஆட்டத்தில் விராட் கோலி 92 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இதையடுத்து இந்த வருட ஐபிஎல் போட்டியில் அதிக ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தார் கோலி. 4 ஆட்டங்களில் 201 ரன்கள் எடுத்துள்ளார் கோலி. இதையடுத்து போட்டியின் வழக்கப்படி அவருக்கு ஆரஞ்சுத் தொப்பி வழங்கப்பட்டது. ஆனால் அதைத் தயங்கியபடிதான் அணிந்துகொண்டார் கோலி. பிறகு அவர் கூறியதாவது:
இந்தத் தொப்பியை அணிய எனக்கு இப்போது விருப்பமில்லை. ஏனெனில் அதற்கு எவ்வித அர்த்தமும் இல்லை. நன்றாகத் தொடங்கிய நாங்கள் பிறகு விக்கெட்டுகளைச் சுலபமாக இழந்துவிட்டோம். ஒன்றிரண்டு நல்ல கூட்டணிகள் அமைந்திருந்தால் நாங்கள் வெற்றி பெற்றிருப்போம். ஆனால் மும்பை அணி அற்புதமாக பந்துவீசியது. நாங்கள் முயற்சி செய்தபோதும் சரியான வாய்ப்புகள் எங்களுக்குக் கிடைக்கவில்லை என்று கூறினார்.