பிசிசிஐ மறுசீரமைப்பு விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இணங்காததாகக் கூறி, அதன் மேலாளர்கள் ரத்னாகர் ஷெட்டி, எம்.வி.ஸ்ரீதர் ஆகியோருக்கு எதிராக லோதா குழுவிடம் ஆதித்யா வர்மா புகார் அளித்துள்ளார்.
ஐபிஎல் சூதாட்ட வழக்கின் மனுதாரரான ஆதித்யா, மேற்கூறிய இருவரும் மாநில கிரிக்கெட் சங்கத்தின் பதவியில் 9 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருவதாக தனது புகாரில் தெரிவித்துள்ளார்.
இதில் ஷெட்டி, கடந்த 1996-2005 வரையிலான காலகட்டத்தில் (9 ஆண்டுகள்) மும்பை கிரிக்கெட் சங்கத்தின் இணைச் செயலராக இருந்துள்ளார். அத்துடன், கடந்த 2005-06 மற்றும் 2010-11 ஆகிய காலகட்டத்தில் அச்சங்கத்தின் பொருளாளராகவும் பொறுப்பு வகித்துள்ளார்.
அதேபோல் ஹைதராபாத் ரஞ்சி கிரிக்கெட் வீரரான ஸ்ரீதர், 2000-06 வரையிலான காலகட்டத்தில் மாநில கிரிக்கெட் சங்கத்தின் இணைச் செயலராகவும், 2009-10 மற்றும் 2012-14 காலகட்டத்தில் செயலராகவும் செயலாற்றியுள்ளார்.
பிசிசிஐ மற்றும் மாநில கிரிக்கெட் சங்கங்களில் பொறுப்பில் இருப்பவர்கள், 9 ஆண்டுகளுக்கும் மேலாக அந்தப் பதவியில் நீடிக்கக் கூடாது என்று லோதா குழு வழங்கிய பரிந்துரையை அமல்படுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், ஆதித்யா வர்மா இத்தகைய புகாரை அளித்துள்ளார்.