மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடிய இந்திய அணியில் இடம்பெற்றிருந்த கேப்டன் மிதாலி ராஜ் உள்ளிட்ட 10 ரயில்வே வீராங்கனைகளுக்கு தலா ரூ.13 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்படும் என ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு அறிவித்துள்ளார்.
இங்கிலாந்தில் நடைபெற்ற மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இறுதிச்சுற்று வரை முன்னேறிய இந்திய அணி, அதில் 9 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்திடம் தோற்றது. இந்திய வீராங்கனைகள் உலகக் கோப்பையை நழுவவிட்டாலும், இந்திய ரசிகர்களின் இதயங்களை வென்றுவிட்டனர்.
இந்த நிலையில் இந்திய அணியில் இடம்பெற்றிருந்த ரயில்வே வீராங்கனைகளுக்கு வியாழக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது. அதில் ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு, கலந்து கொண்டு வீராங்கனைகளை பாராட்டினார். அப்போது 10 வீராங்கனைகளுக்கும் தலா ரூ.13 லட்சம் வழங்கப்படும் என அவர் அறிவித்தார். ரயில்வேயில் பணியாற்றி வரும் மிதாலி ராஜுக்கு பதவி உயர்வும் கிடைத்துள்ளது. அவர், முதன்மை கண்காணிப்பாளராக (விளையாட்டு) பதவி உயர்வு பெற்றிருக்கிறார்.