பத்தாவது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் தொடரிலிருந்து ரைஸிங் புணே சூப்பர்ஜயன்ட்ஸ் வீரர் அஸ்வின் விலகியுள்ளார்.
அவர், "ஸ்போர்ட்ஸ் ஹெர்னியா' (அடிவயிற்றுப் பகுதியில் லேசான தசை கிழிவு) பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளார். அதிலிருந்து குணமடைய 6 முதல் 8 வாரங்கள் வரை ஓய்வு அவசியமாகும். அதனால் ஐபிஎல் போட்டியிலிருந்து விலகியிருக்கிறார். அவர், சாம்பியன்ஸ் டிராபி போட்டிக்கு முன்னதாக பூரண குணமடைந்து விடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சீசனில் அஸ்வின் இந்திய அணிக்காக 13 டெஸ்ட் போட்டிகளில் விளையாடினார். அதில் 738.2 ஓவர்களை வீசிய அவர் 82 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்மூலம் ஒரு சீசனில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற சாதனையைப் படைத்தார். தொடர்ச்சியாக கிரிக்கெட் விளையாடியதன் காரணமாக அவர் இப்போது காயத்தின் பிடியில் சிக்கியிருக்கிறார்.