தேசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் மௌசம் கத்ரி, அமித் தங்கர் ஆகியோர் முறையே தங்களது எடைப்பிரிவில் தங்கம் வென்றனர்.
ரியோ ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற இந்திய மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக்கின் கணவர் சத்யவரத் கடியான், இந்தப் போட்டியில் வெண்கலம் வென்றார்.
மேலும், மல்யுத்த போட்டிகளில் பரவலாக கவனம் ஈர்த்துவரும் இந்திய வீரர்கள் ராகுல் அவாரே (61 கிலோ எடைப்பிரிவு), ஜிதேந்தர் (79 கிலோ), சோம்வீர் (92 கிலோ), சுமித் (125 கிலோ) ஆகியோர் தங்கம் வென்றனர்.
முன்னதாக, ஆடவர் "ப்ரீ ஸ்டைல்' 97 கிலோ எடைப்பிரிவில் சனிக்கிழமை நடைபெற்ற இறுதிச்சுற்றில், ஹரியாணாவைச் சேர்ந்த கத்ரி, ருபல்ஜீத்தை வீழ்த்தினார். இதேபோல், 70 கிலோ எடைப் பிரிவில் அருண் குமாரை வீழ்த்தி அமித் தங்கர் சாம்பியன் ஆனார்.
ஹரியாணா ஆதிக்கம்: மல்யுத்த போட்டியின் ஆடவர், மகளிர் மற்றும் கிரேக்கோ-ரோமன் ஆகிய 3 பிரிவுகளிலும் ஹரியாணா குழு அதிக வெற்றியை ருசித்தது.