தசைப்பிடிப்பால் பாதிக்கப்பட்டுள்ள இந்திய பாட்மிண்டன் வீரர் ஸ்ரீகாந்த், ஹாங்காங் ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியிலிருந்து விலகியுள்ளார்.
இதுகுறித்து, இந்திய பாட்மிண்டன் அணியின் இயன்முறை (பிஸியோதெரபி) மருத்துவர் சி.கிரண் கூறுகையில், "தசைப்பிடிப்பால் பாதிக்கப்பட்டிருந்த ஸ்ரீகாந்த் சற்று தேறியுள்ளார். இருப்பினும், முழுமையாக குணமடையவில்லை. 100 சதவீத உடல்தகுதி அடைந்த பிறகே அவரை போட்டிகளில் அனுமதிக்க முடிவு செய்திருக்கிறோம். எனவே, அவர் மேலும் ஒரு வாரம் ஓய்வெடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளார்' என்றார்.
உலக தரவரிசையில் 2-ஆவது இடம் வகிக்கும் ஸ்ரீகாந்த், இந்த ஆண்டில் 5 பாட்மிண்டன் போட்டிகளில் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியதுடன், 4-இல் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள துபை சூப்பர் சீரிஸ் ஃபைனல் போட்டியில் ஸ்ரீகாந்த் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, சமீர் வர்மா, அஜய் ஜெயராம் ஆகியோரும் காயம் காரணமாக ஹாங்காங் ஓபனில் பங்கேற்கவில்லை என அறிவித்துள்ளனர்.
சாய் ப்ரணீத் பங்கேற்பு: எனினும், சிங்கப்பூர் ஓபனில் சாம்பியன் பட்டம் வென்ற பி.சாய் ப்ரணீத், ஹாங்காங் ஓபனில் பங்கேற்கப்போவதாக அறிவித்துள்ளார்.