இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளை இழந்து இன்னிங்ஸ் தோல்வியைத் தவிர்க்கப் போராடிவருகிறது.
இலங்கையின் பல்லகெலேவில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்தது இந்திய அணி. ஷிகர் தவன் 119, பாண்டிய 108, ராகுல் 85 ரன்கள் குவிக்க, 114.2 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 421 ரன்கள் எடுத்தது இந்திய அணி. முதல் இன்னிங்ஸை ஆடிய இலங்கை அணி 37.4 ஓவர்களில் 135 ரன்களுக்குச் சுருண்டது. இதையடுத்து பாலோ-ஆன் பெற்று 2-ஆவது இன்னிங்ஸை ஆடிய இலங்கை அணி 2-வது நாள் ஆட்டநேர முடிவில் 13 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 19 ரன்கள் எடுத்தது.
இந்தியாவின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை எட்டுவதற்கு இலங்கை இன்னும் 333 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில் இன்றைய ஆட்டம் தொடங்கியது. நேற்று மாலை வேளையில் சிறப்பாகப் பந்துவீசிய அஸ்வின், கருணாரத்னேவை 16 ரன்களில் வெளியேற்றினார். முதல் இன்னிங்ஸில் சிறப்பாகப் பந்துவீசிய சமி, இந்தமுறையும் இலங்கை பேட்ஸ்மேன்களுக்கு அச்சுறுத்தலாக விளங்கினார். புஷ்பகுமாரா 1 ரன்னிலும் மெண்டிஸ் 12 ரன்களிலும் சமியின் பந்துவீச்சால் வெளியேறினார்கள். இதனால் 39 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து இலங்கை அணி தவித்தது.
அதன்பிறகு ஜோடி சேர்ந்த சன்டிமல் - மேத்யூஸ், கவனமாக விளையாடி மேலும் விக்கெட்டுகள் விழாமல் பார்த்துக்கொண்டார்கள்.
3-ம் நாள் மதிய உணவு இடைவேளையின்போது இலங்கை அணி 42 ஓவர்களில் 82 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணி 6 விக்கெட்டுகள் மீதமுள்ள நிலையில் 270 ரன்கள் பின்தங்கியுள்ளது. சன்டிமல் 26, மேத்யூஸ் 17 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள். இதையடுத்து இந்தப் போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் வெற்றி பெற்று 3-0 என தொடரை வெல்வது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது.