இங்கிலாந்துக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அட்டகாசமாக வெற்றி பெற்றுள்ளது.
லீட்ஸில் கடந்த 25-ஆம் தேதி தொடங்கிய ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து 70.5 ஓவர்களில் 258 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அடுத்து ஆடிய மேற்கிந்தியத் தீவுகள் 127 ஓவர்களில் 427 ரன்கள் குவித்தது. இதையடுத்து முதல் இன்னிங்ஸில் 169 ரன்கள் பின்தங்கிய இங்கிலாந்து, தனது 2-ஆவது இன்னிங்ஸில் 141 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 490 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. பின்னர் 322 என்ற வெற்றி இலக்கை நோக்கி ஆடிய மேற்கிந்தியத் தீவுகள் 91.2 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 322 ரன்கள் எடுத்து எதிர்பாராத விதத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டுள்ளது.
தொடக்க வீரர் பிராத்வெயிட் 95, ஷாய் ஹோப் 118 ரன்கள் எடுத்து இங்கிலாந்து பந்துவீச்சை சிறப்பாக எதிர்கொண்டார்கள். முதல் இன்னிங்ஸிலும் பிராத்வெயிட் 134, ஹோப் 147 ரன்கள் எடுத்து இரு இன்னிங்ஸ்களிலும் அணிக்குச் சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளார்கள். இரு இன்னிங்ஸ்களிலும் சதமடித்த ஷாய் ஹோப் ஆட்ட நாயகன் விருது பெற்றார். மிகவும் பரபரப்பான முறையில் நடைபெற்ற இந்த டெஸ்ட் போட்டி விளக்கொளியில் மாலை 6.43 மணிக்கு முடிவு பெற்றது. கடைசி நாளின் கடைசிப் பகுதியில் 35 ஓவர்களில் 123 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ஹோப்பின் சதத்தால் அட்டகாசமான வெற்றியைப் பெற்றுள்ளது மேற்கிந்தியத் தீவுகள் அணி.
மூன்று டெஸ்டுகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று சமநிலையில் உள்ளன.
இரு அணிகள் இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி செப்டம்பர் 7 அன்று லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ளது.