இந்தியா சுற்றுப்பயணம் செய்துள்ள இலங்கை அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 தொடரில் பங்கேற்று விளையாடுகிறது. இதில் டெஸ்ட் போட்டித் தொடர் வியாழக்கிழமை தொடங்கி நடைபெறுகிறது.
கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் இவ்விரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி இன்று துவங்கியது.
இதில் டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் தினேஷ் சண்டிமல் பந்துவீச்சை தேர்வு செய்தார். இருப்பினும் மழை காரணமாக போட்டி துவங்குவதில் தாமதம் ஏற்பட்டது.
இந்திய அணியைப் பொறுத்தவரையில் முரளி விஜய் சேர்க்கப்படவில்லை. ராகுல், தவன் ஆகியோர் துவக்க வீரர்களாகக் களமிறங்கினர். அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோர் நீண்ட இடைவேளைக்குப் பிறகு இந்திய அணிக்குத் திரும்பினர்.
பின்னர் களமிறங்கிய இந்திய அணிக்கு ஆட்டத்தின் முதல் பந்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. இலங்கை வேகப்பந்துவீச்சாளர் லக்மல் வீசிய அந்தப் பந்தில் இந்திய அணியின் துவக்க வீரர் லோகேஷ் ராகுல் விக்கெட் கீப்பர் டிக்வெல்லாவிடம் கேட்ச் கொடுத்து 'கோல்டன் டக்' முறையில் ஆட்டமிழந்தார்.
மற்றொரு துவக்க வீரர் ஷிகர் தவன் 8 ரன்களுடன் நடையைக் கட்டினார். பின்னர் களமிறங்கிய கேப்டன் விராட் கோலி 11 பந்துகளை சந்தித்து டக்-அவுட்டாகி பெவிலியன் திரும்பினார்.
இலங்கையின் ஆக்ரோஷப் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் இந்திய அணி ஒருபுறம் தடுமாறிய போது மறுபுறம் மழை காரணமாக அவ்வப்போது ஆட்டம் நிறுத்தப்பட்டது. இதனால் இந்திய அணி மேலும் விக்கெட்டுகளை இழந்து தடுமாறாமல் தப்பியது.
இதனால் முதல் நாள் ஆட்டநேர முடிவில் 11.5 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டது. புஜாரா 8 ரன்கள் மற்றும் ரஹானே ரன் கணக்கை துவங்காமல் களத்தில் உள்ளனர். இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 17 ரன்கள் மட்டுமே எடுத்து தடுமாறி வருகிறது.
இலங்கை தரப்பில் வேகப்பந்துவீச்சாளர் சுரங்கா லக்மல் 6 ஓவர்களை வீசி ரன்களே வழங்காமல் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இந்நிலையில், அடுத்த 2 தினங்களுக்கு போட்டி நடைபெறும் இடத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.