மேடிசன் ஓபன் ஸ்குவாஷ் போட்டியில் இந்தியாவின் வேலவன் செந்தில்குமார் சாம்பியன் பட்டம் வென்றார்.
உலகின் 255-ஆம் நிலை வீரரான வேலவன் வெல்லும் முதல் உலக ஸ்குவாஷ் டூர் பட்டமாகும்.
அமெரிக்காவில் நடைபெற்ற இப்போட்டியில், வேலவன் தனது இறுதிச்சுற்றில் போட்டித் தரவரிசையில் 4-ஆவது இடத்தில் இருந்த தென் ஆப்பிரிக்காவின் டிரிஸ்டான் ஐசெலெவை எதிர்கொண்டார். 56 நிமிடங்களில் முடிவுக்கு வந்த இந்த ஆட்டத்தில் 7-11, 13-11, 12-10, 11-4 என்ற செட்களில் வேலவன் வெற்றி பெற்றார்.
பிரிட்டிஷ் ஜூனியன் ஓபன், ஆசிய ஜூனியர் சாம்பியன் பட்டங்களை வென்றிருந்த வேலவன், முதல் முறையாக வெல்லும் சீனியர் பட்டம் இதுவாகும். இதற்கு முன்பாக அவர் 2 உலக டூர் போட்டிகளில் இறுதிச்சுற்று வரை முன்னேறியிருந்தார்.
முன்னதாக வேலவன், இப்போட்டியில் தனது முதல் சுற்றில் போட்டித் தரவரிசையில் 3-ஆவது இடத்தில் இருந்த ஸ்பெயினின் பெர்னாட் ஜுவாமேவை வீழ்த்தினார். பின்னர் காலிறுதியில் இங்கிலாந்தின் மார்க் ஃபுல்லரையும், அரையிறுதியில் சகநாட்டவரான ஆதித்யா ஜகதாப்பையும் தோற்கடித்தார்.