இந்திய பள்ளிகளுக்கான விளையாட்டுக் குழுமம் (School Game Federation Of India) சார்பில் தேசிய அளவில் நடைபெறவுள்ள கிரிக்கெட் உள்ளிட்ட போட்டிகளுக்கு வீரர், வீராங்கனைகளைத் தேர்வு செய்யும் போட்டிகள் சென்னையில் வியாழக்கிழமை முதல் நடைபெறவுள்ளன.
இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை புதன்கிழமை வெளியிட்ட செய்தி:
மாணவ, மாணவிகளைத் தேர்வு செய்வதற்காக நேரடித் தெரிவுப் போட்டிகள் பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் ஆக.16 முதல் ஆக.25 வரை நடைபெறவுள்ளது.
இப்போட்டிகளில் கலந்துகொள்ள தகுதியுள்ள தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரின் கட்டுப்பாட்டில் செயல்படும் அரசு, அரசு உதவி பெறும் பள்ளி, மாநகராட்சிப் பள்ளி, மெட்ரிக் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் தங்களது பள்ளியின் தலைமையாசிரியர் கையொப்பத்துடன் கூடிய தகுதிப் படிவம் பிறப்புச் சான்றிதழின் நகல், பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழின் நகல், ஆதார் அட்டையின் நகல் ஆகியவற்றைக் கொண்டு வர வேண்டும். பங்கேற்க விரும்பும் மாணவர்கள் தெரிவுப் போட்டி நடைபெறும் வளாகத்துக்கு காலை 7 மணிக்குள் வர வேண்டும் என்று அந்த செய்தி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தெரிவுப் போட்டியின் அட்டவணை:
பீச் வாலிபால்: 14,17,19 வயதுக்குள்பட்ட மாணவ, மாணவிகள்- ஆக.16- தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், நாகப்பட்டினம்.
கிரிக்கெட்: 17 வயதுக்குள்பட்ட மாணவர்கள்- ஆக.20- எம்.சி.சி. மேல்நிலைப்பள்ளி, சேத்துப்பட்டு, சென்னை.
14 வயதுக்குள்பட்ட மாணவர்கள்- ஆக.21, எம்.சி.சி. மேல்நிலைப்பள்ளி, சேத்துப்பட்டு, சென்னை.
17 வயதுக்குள்பட்ட மாணவிகள்- ஆக.22- எம்.சி.சி. மேல்நிலைப்பள்ளி, சேத்துப்பட்டு, சென்னை
19 வயதுக்குள்பட்ட மாணவர்கள்- ஆக.23- ஏஜிஎஸ் நிதி மேல்நிலைப்பள்ளி, ஆலந்தூர்,
காஞ்சிபுரம்.
19 வயதுக்குள்பட்ட மாணவிகள்- ஆக.25- ஏஜிஎஸ் நிதி மேல்நிலைப்பள்ளி, ஆலந்தூர்,
காஞ்சிபுரம்.