இந்தியாவுக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் 146 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது.
4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று இந்திய அணி விளையாடி வருகிறது. அடிலெய்டில் நடைபெற்ற முதல் டெஸ்டில் 31 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி ஆஸி.யை வீழ்த்தியது. இதையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையேயான 2ஆவது டெஸ்ட் போட்டி கடந்த வெள்ளிக்கிழமை பெர்த்தில் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வந்தது.
அதில் முதல் இன்னிங்ஸில் ஆஸி.அணி 326 ரன்களுக்கும், இந்தியா 283 ரன்களுக்கு ஆல் அவுட்டாயினர். 43 ரன்கள் முன்னிலையுடன் 2-ஆவது இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலிய அணி 2-வது இன்னிங்சில் 93.2 ஓவர்களில் 243 ரன்களில் ‘ஆல்-அவுட்’ ஆனது. இந்திய தரப்பில் முகமது சமி அபாரமாக பந்துவீசி 56 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டை சாய்த்தார். பும்ரா 39 ரன்களை கொடுத்து 3 விக்கெட்டையும். இஷாந்த் 1-45 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
பின்னர் 287 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2-ஆவது இன்னிங்சை ஆடிய இந்திய அணி நேற்றைய ஆட்ட நேரம் முடிவில் 41 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 112 ரன்கள் எடுத்து திணறிக் கொண்டிருந்தது. ஹனுமா விஹாரி 24 ரன்களுடனும், பந்த் 9 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்த நிலையில், இன்று 5-ஆவது நாள் ஆட்டம் துவங்கிய சிறிது நேரத்தில் ஹனுமா விஹாரி, ஸ்டார்க் பந்தில் 28 ரன்களில் வெளியேறினார். பந்த் 30 ரன்களில் லயன் சுழலில் சிக்கினார். பின்னர் வந்த வீரர்களும் அடுத்தடுத்து பெவிலியன் திரும்பினர்.
இறுதியில் இந்திய அணி 140 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 146 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய அணி 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்துள்ளது. இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 3-ஆவது டெஸ்ட் போட்டி வரும் 26 ஆம் தேதி மெல்ஃபோர்னில் துவங்குகிறது.
முதல் இன்னிங்ஸ்: ஆஸ்திரேலியா- 326, இந்தியா- 283
இரண்டாவது இன்னிங்ஸ்: ஆஸி.- 243, இந்தியா- 140 ரன்