ஆசிய கோப்பை வில்வித்தையின் '1-ஆம் நிலை' போட்டியில் இந்தியா 3 தங்கம், 2 வெண்கலம் என 5 பதக்கங்கள் வென்றது.
இதில் மகளிருக்கான தனிநபர் ரிகர்வ் பிரிவில் இந்தியாவின் பிரமிளா டெய்மேரி 7-3 என்ற கணக்கில் ரஷியாவின் நடாலியா எர்டைனீவாவை வீழ்த்தி தங்கம் வென்றார். ஆடவர் பிரிவில் இந்தியாவின் ஆகாஷ், கோரா ஹோ, கெளரவ் லம்பே அணி 27-26 என்ற கணக்கில் மங்கோலிய அணியை வீழ்த்தி தங்கம் வென்றது.
முன்னதாக, மகளிருக்கான தனிநபர் காம்பவுண்ட் பிரிவில் இந்தியாவின் முஸ்கான் கிரார் 139-136 என்ற கணக்கில் மலேசியாவின் நதிரா ஜகாரியா சஸாதுலை வீழ்த்தி புதன்கிழமை தங்கப் பதக்கம் வென்றார்.
இதேபோல், மது வேத்வான் 6-5 என்ற கணக்கில் மங்கோலியாவின் அல்டாங்கெரல் எங்துயாவை வீழ்த்தி வெண்கலம் வென்றார். மகளிர் காம்பவுண்ட் அணிகள் பிரிவில் முஸ்கான் கிரார்-திவ்யா தயால்-மிருனாள் ஹிவ்ராலே ஆகியோர் அடங்கிய இந்திய அணி 227-221 என்ற கணக்கில் இந்தோனேஷிய அணியை வீழ்த்தி வெண்கலம் வென்றது.
இதனிடையே, தங்கம் வென்ற முஸ்கான் கிராருக்கு மத்தியப் பிரதேச சட்டப்பேரவை தலைவர் சீதாசரண் சர்மா, மாநில விளையாட்டுத் துறை அமைச்சர் யசோதரா ராஜ சிந்தியா ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.