மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரில் நியூஸிலாந்துக்கு எதிரான முதல் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர் அபாரமாக விளையாடி சதம் அடித்துள்ளார்.
மகளிர் டி20 உலகக்கோப்பையில், இந்திய அணி தனது முதல் போட்டியில் இன்று (வெள்ளிக்கிழமை) நியூஸிலாந்தை எதிர்கொண்டது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி தொடக்க வீராங்கனைகளாக தானியா பாட்டியா மற்றும் ஸ்மிருதி மந்தானா களமிறங்கினர். ஆனால், அவர்கள் ஒற்றை இலக்கு ரன்களில் வெளியேறினர். அவர்களைத் தொடர்ந்து, களமிறங்கிய ஹேமலதாவும் 15 ரன்களில் வெளியேற இந்திய அணி 40 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து திணறியது.
இதையடுத்து, ஜெமிமா ரோட்ரிக்ஸ் உடன் கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நியூஸிலாந்து வீராங்கனைகளின் பந்தை நாலாபுறமும் சிதறடித்தனர். சிக்ஸர்கள் அடித்து மிரட்டிய ஹர்மன்பிரீத் கௌர் அரைசதம் அடித்து 200 ஸ்டிரைக் ரேட்டில் ரன் குவித்து வந்தார்.
இந்த ஜோடியை பிரிக்க நியூஸிலாந்து வீராங்கனைகள் எடுத்து முடிவுகள் அனைத்தும் தோல்வியிலேயே முடிந்தது. இதனால், இந்த ஜோடி 5-ஆவது விக்கெட்டுக்கு 100 ரன்களை கடந்தது.
கடைசியாக 19-ஆவது ஓவரின் கடைசி பந்தில் ரோட்ரிக்ஸ் ஆட்டமிழந்தார். இவர், 45 பந்துகளில் 7 பவுண்டரிகள் உட்பட 59 ரன்கள் எடுத்தார்.
மறுமுனையில், அரைசதம் அடித்து அதிரடியில் மிரட்டிய ஹர்மன்பிரீத் 49-ஆவது பந்தில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். அவர், 51 பந்துகளில் 7 பவுண்டரிகள், 8 சிக்ஸர்கள் உட்பட 103 ரன்களை விளாசி 20-ஆவது ஓவரின் 5-ஆவது பந்தில் ஆட்டமிழந்தார்.
ஜெமிமா மற்றும் ஹர்மன்பிரீத் அதிரடியினால் இந்திய மகளிர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 194 ரன்கள் எடுத்தது.
இதைத்தொடர்ந்து, 195 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூஸிலாந்து வீராங்கனைகள் களமிறங்கி விளையாடி வருகின்றனர்.