இலங்கைக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து தனது முதல் இன்னிங்ஸில் 75.4 ஓவர்களில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 285 ரன்கள் எடுத்தது.
இலங்கையின் கன்டி நகரில் புதன்கிழமை தொடங்கியுள்ள இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட் செய்ய தீர்மானித்தது. அணியின் தொடக்க வீரர் ரோரி பர்ன்ஸ் 43 ரன்கள் அடிக்க, உடன் வந்த கீட்டன் ஜென்னிங்ஸ் ஒரு ரன்னிலேயே வீழ்ந்தார். பின்னர் வந்த பென் ஸ்டோக்ஸ் 19 ரன்கள் சேர்த்தார்.
கேப்டன் ஜோ ரூட் 2 பவுண்டரிகள் உள்பட 14 ரன்கள் அடித்து, புஷ்பகுமாரா பந்துவீச்சில் போல்டாகி வெளியேறினார். அடுத்து களம் கண்ட ஜோஸ் பட்லர் சற்று அதிரடியாக ஆடி அரைசதம் கடந்தார். 7 பவுண்டரிகளுடன் 63 ரன்கள் சேர்த்து அவர் பெவிலியன் திரும்பினார். தொடர்ந்து வந்தவர்களில் மொயீன் அலி 10, பென் ஃபோக்ஸ் 19 ரன்களில் நடையக் கட்டினர்.
சாம் கரன் நிதானமாக ஆடி ரன்கள் குவித்தார். ஒரு பவுண்டரி மட்டுமே விளாசிய அவர், 6 சிக்ஸர்களை பறக்கவிட்டிருந்தார். 64 ரன்கள் குவித்த அவர் பெரேரா பந்துவீச்சில் கருணாரத்னேவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் வந்த ஆதில் ரஷீத் 31, ஜேக் லீச் 7 ரன்கள் எடுக்க, இறுதியில் ஜேம்ஸ் ஆண்டர்சன் 7 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இலங்கை தரப்பில் அதிகபட்சமாக தில்ருவன் பெரேரா 4, புஷ்பகுமாரா 3, அகிலா தனஞ்ஜெயா 2, சுரங்கா லக்மல் ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
இலங்கை- 26/1: இதையடுத்து, தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இலங்கை முதல் நாளான புதன்கிழமை ஆட்டநேர முடிவில் 12 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 26 ரன்கள் எடுத்திருந்தது. கருணாரத்னே 19, புஷ்பகுமாரா 1 ரன்னுடன் களத்தில் உள்ளனர். முன்னதாக கெளஷல் சில்வா 6 ரன்கள் எடுத்த நிலையில் ஜேக் லீச் பந்துவீச்சில் போல்டாகினார்.